கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் – மம்தா பானர்ஜி…!


டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இலங்கைக்கான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி வீரர்கள் காற்று மாசு காரணமாக மாஸ்க் அணிந்து விளையாடினர். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் தடை ஏற்பட்டது.


இந்நிலையில், டெல்லியில் இலங்கை அணி வீரர்கள் மாஸ்க் அணிந்து கிரிக்கெட் விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மேற்கு வங்காளம் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, வெளிநாட்டில் இருந்து வந்து சர்வதேச போட்டியை விளையாடும் வீரர்கள் மாஸ்க் அணிவது சரியானது கிடையாது.

காற்று மாசுபாடு ஒவ்வொரு நாளும் மோசமடைந்து வருகிறது. இது நாட்டிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்காது. மாசுபாட்டை டெல்லி கட்டுப்படுத்த வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

இதுகுறித்து டெல்லி அரசு அமர்ந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை நான் வெட்கமாக உணர்கிறேன், இல்லையெனில் இதனை நான் சொல்லியிருக்க மாட்டேன். இது உண்மையான பிரச்சினை என தெரிவித்துள்ளார். – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!