தெருவில் அடிபட்ட நாய்க்காக சரத்குமாரின் முன்னாள் மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்..!


தெருவில் அடிபட்ட நாய்க்காக காவல் நிலையம் வரை சென்று நாயின் உரிமையையும், உயிரையும் மீட்ட நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவியும், நடிகை வரலட்சுமியின் தாயாருமான சாயாதேவி, தற்போது சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

அப்படி ஒருநாள் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது, அந்த பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு நாய்க்கு தினமும் பிஸ்கட் உள்ளிட்ட திண்பண்டங்களை வழங்கியுள்ளார்.

அதனால் அந்த நாயானது இவருடன் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாயாதேவி நடைபயிற்சி மேற்கொள்ளும் போது வழக்கமாக பார்க்கும் தெரு நாயான ராமு வரவில்லை. இதேபோல் மறுநாளும் நடைபயிற்சி மேற்கொள்ளும் போதும் தெரு நாயான ராமு வரவில்லை.

உடனே சாயாதேவி ராமுவை பற்றி அந்த சாலையில் வசித்து வருபவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது தெருநாய் ராமுவின் மீது ஒரு கார் ஏறியதாகவும், அதனால் நடக்க கூட முடியவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனே அதிர்ச்சி அடைந்த சாயாதேவி விரைந்து சென்று ராமுவை மீட்டு அருகில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் சேர்த்தார்.

அதனை தொடர்ந்து ராமுவின் சிகிச்சைக்காக வாட்ஸ்-ஆப் குரூப் ஒன்றை தொடங்கி அதன் மூலம் நிதி திரட்டி சிகிச்சை அளித்தார். தற்போது ராமுவின் உடல்நிலை முன்னேறி வரும் நிலையில், தெருவில் கிடந்த நாயை ஏற்றிச் சென்ற கார் யாருடையது என்பது குறித்து சாயாதேவி அக்கம்பக்கத்தினரிடம் கேட்டுள்ளார்.

அந்த சமயத்தில் ராமுவின் மீது ஏறிய காரானது அந்த வழியாக வந்துள்ளது. உடனே காரை வழிமறித்த சாயாதேவி கார் டிரைவர் சங்கரிடம் நியாயம் கேட்டுள்ளார். அவர் உரிய விளக்கம் அளிக்காததால் கோபமடைந்த சாயாதேவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார்.

இப்புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காரின் டிரைவர் சங்கரை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து நாயின் சிகிச்சைக்காக ஏற்படும் அனைத்து செலவுகளையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.

பின்பு தினமும் ராமுவின் உடல்நலம் தேறி வருவதை பற்றி முகப்புத்தகம் மூலம் பதிவேற்றம் செய்து வருகிறார். ஒரு நாய்க்காக போராடிய சாயாதேவியை கோட்டூர்புரத்தில் உள்ள மக்கள் வெகுவாக பாராட்டியும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.-source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!