சினிமாவில் பட வாய்ப்புக்காகப் படுக்கையா? ‘முதல் மரியாதை’ ரஞ்சனி ஓபன் டாக்..!


நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகைகளிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள்!’ – தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி திரைத்துறையிலும் சமீபகாலமாக இதுதான் பேசுபொருள். தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி விவகாரமும் மலையாள சினிமாவில் திலீப் விவகாரமும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளைத் தடுக்க மற்ற துறைகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் போன்று சினிமாவிலும் புகுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது தேசிய மகளிர் ஆணையம்.

அதன் முதல் படியாக மகளிர் ஆணையமும் புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்ட்டிடியூட்டும் இணைந்து ஜூலை 14-ம் தேதி அன்று புனேயில் இது குறித்து ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசவிருக்கிறார், நடிகை ரஞ்சனி. இவர் ‘முதல் மரியாதை’ படத்தில் நடித்தவர். திருநெல்வேலியில் பிறந்த இவர், தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வந்தார். தற்போது ரஞ்சனி கேரளாவில் செட்டிலாகிவிட்டார். அவரிடம் பேசினோம்.

“நடிகைகளுக்கு மட்டுமல்ல, டெக்னீஷியன்கள் உட்பட சினிமாவின் அனைத்துத் துறைப் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதே இன்றைய யதார்த்தம். இதைச் சொல்றதுக்கு எனக்கு எந்தவித அச்சமும் இல்லை. தங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பது மெச்சூர்டான நடிகைகளுக்கே தெரியவில்லை என்பதுதான் வருத்தம். அதனால, இந்த விஷயத்தை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்பது தெரியாமல் ஒவ்வொருவரும் விழித்துக்கொண்டு இருக்கிறோம். வெளியில பகிர்ந்துகொள்ள முடியாத சில விஷயங்கள்கூட இதில் உள்ளன. இவை அனைத்தையும் செமினாரில் வெளிப்படையாகப் பேசப்போகிறேன். தீர்வு வரட்டுமே!

அதாவது, மற்ற துறைகளில் ‘விசாகா’ கமிட்டி இருப்பதைப்போல், சினிமா மற்றும் டெலிவிஷன் துறைகளிலும் ஒரு சிறப்புக் கமிட்டி இருக்க வேண்டும். அந்தக் கமிட்டியில் சினிமா சம்பந்தப்பட்ட சீனியர் ஆர்ட்டிஸ்டுகளுடன் வெளியில இருந்தும் பெண்கள் உரிமைக்காகப் பேசுகிற பெண்களையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் கமிட்டியின் வேலை, நடிகைகளுக்குப் பிரச்னை வராதபடி பார்த்துக்கொள்வது, ஒருவேளை, பிரச்னை உண்டானால், சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு நியாயம் கிடைக்க முயற்சி எடுப்பதுதான்.


இந்தக் கமிட்டியை நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட சினிமா தொடர்பான அனைத்துச் சங்கங்களும் சேர்ந்து உருவாக்க வேண்டும். இப்படி அமைக்கப்படுகிற கமிட்டி ‘மகளிர் ஆணையம்’ போன்ற அரசு அமைப்புடன் தொடர்பில் இருந்து செயல்படும்போது, பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

ஒருவேளை, இந்தக் கமிட்டியால் தீர்த்துவைக்க முடியாத அளவுக்குப் பிரச்னைகள் எல்லை மீறிப் போனால், விவகாரத்தை மகளிர் ஆணையமே, காவல்துறை, நீதிமன்றம் ஆகிய அரசு அமைப்புகளுக்குக் கொண்டு வந்து நியாயமான தீர்வு வாங்கித் தர வேண்டும்” என்கிறார் நடிகை ரஞ்சனி.

“சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டீர்கள். இப்போது, மத்திய அரசு சார்ந்த விழாவுக்குப் பேச அழைக்கப்பட்டுள்ளீர்கள். பா.ஜ.க-வில் சேரும் திட்டம் இருக்கிறதா” எனக் கேட்டோம்.

“கேரளாவில் ‘அம்மா’ சங்கத்திலிருந்து வெளியேறி மஞ்சு வாரியர் தலைமையில் நடிகைகள் சேர்ந்து தொடங்கிய ‘சினிமா பெண்கள் கூட்டுக்குழு’வின் பிரதிநிதியாகத்தான் நான் கருத்தரங்கத்தில் பேசப்போகிறேன். மற்றபடி, நான் எந்த ஓர் அரசியல் கட்சியிலும் தற்போது இல்லை. சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்தால், நிச்சயம் நடிப்பேன்’’ என்றார்.-source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!