மகல் சாபதியிடம் இளம் பாபா நடத்திய அந்த அற்புதம் என்ன தெரியுமா?


இளம்பாபா திடீரென மறைந்து விட்டது போல மகல்சாபதிக்கு தோன்றியது. அந்த இடத்தில் கண்டோபா ஆலயம் உருவானது. அந்த ஆலயத்தின் கருவறைக்குள் தான் நிற்பது போல மகல்சாபதி உணர்ந்தார். அடுத்த சில வினாடிகளில் மின்னலென அந்த காட்சிகள் மறைந்து போனது. மீண்டும் வேப்ப மரத்தடியில் இளம்பாபா இருப்பதை பார்த்தார்.

மகல்சாபதியின் கண்கள் கலங்கின. தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அவரையும் மீறி இத்தனையும் நடந்து முடிந்து விட்டன. பிரமிப்பில் ஆழந்த மகல்சாபதி பாபாவிடம் விடை பெற்று வீடு திரும்பினர். பிறகு அவர் அடுத்தடுத்து பாபாவை வந்து பார்த்தார். ஆலயத்துக்கு தன்னை சந்திக்க வரும் ஒவ்வொரு வரிடமும் அவர் இளம்பாபா பற்றிய அற்புதங்களை கூறத் தொடங்கினார்.

“வேப்ப மரத்தடியில் இருக்கும் சிறுவனை நீங்க எல்லாரும் ஏதோ பித்தன்போல நினைக்கிறீர்கள். ஆனால் என் உள்மனம் அப்படி நினைக்க வில்லை. அந்த பாலகன் மாபெரும் சித்தர் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றார்.


குறிப்பாக தனது நண்பர்கள் காசிநாத், அப்பா ஜோத்லே இருவரிடமும் இளம் பாபா மகிமைகள் பற்றி மகல்சாபதி அடிக்கடி கூறினார். நாளடைவில் மகல்சாபதி, காசிநாத், அப்பா ஜோத்லே மூவரும் தினமும் வேப்ப மரத்தடிக்கு வந்து பாபாவை சந்தித்து பேச தொடங்கினார்கள்.

இதனால் பாபா பற்றி சீரடி ஊர் மக்கள் நல்ல விதமாக நினைக்கத் தொடங்கினார்கள். இளம் பாபாவிடம் சீரடி ஊர் மக்களுக்கு நம்பிக்கை மலர்ந்தது. ஒட்டுமொத்தமாக அவர்கள் பாபாவை நம்பினார்கள். மிக குறுகிய காலத்தில் ஏற்பட்ட இந்த மனமாற்றம்தான் சீரடி மாபெரும் புனித தலமாக மாற்றம் பெறும் அற்புதத்துக்கு வித்திட்டது என்று சொல்லலாம்.

ஒரு கட்டத்தில் பாபாவை சித்தர் என்று சீரடி மக்கள் நினைக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொருவராக அவரை அணுகத் தொடங்கினார்கள். அப்போது சிலரது நோயை இளம் பாபா குணப்படுத்தினார்.


என்றாலும் பாபாவை யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் மட்டும் சீரடி மக்களிடம் குறையவில்லை. அப்போது அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. சீரடியில் செவ்வாய்க்கிழமை தோறும் காண்டோபா கோவிலில் பூஜை செய்யும் போது கண்டோபா தெய்வம் யார் மீதாவது வந்து குறி சொல்லும். அடுத்த வாரம் கண்டோபா தெய்வம் குறி சொல்லும் போது அந்த இளைஞன் பற்றி கேட்க முடிவு செய்தனர்.

அதன்படி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கண்டோபா கோவிலில் பூஜை நடந்த போது, (சிவன்) கடவுள், அந்த ஊர்க்காரர் ஒருவர் மீது இறங்கியது. அந்த நபர் சாமி ஆடி அருள்வாக்கு சொல்லத் தொடங்கினார்.

அப்போது அவரிடம் சீரடி மக்கள், “சாமி…. எங்களுக்கு வேப்ப மரத்தடியில் இருக்கும் இளைஞன் யார் என்ற உண்மை தெரிய வேண்டும். அந்த ரகசியத்தை சொல்லுங்கள்” என்றனர்.


சீரடி மக்களின் கேள்விகளுக்கு கண்டோபா தெய்வம் நேரடியாக பதில் சொல்லவில்லை. ஒரு மண்வெட்டி எடுத்து வரும்படி உத்தரவிட்டது. உடனே ஊர்மக்கள் மண்வெட்டி எடுத்து வந்தனர்.

பிறகு வேப்பமரம் அருகே குறிப்பிட்ட ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு தோண்டும்படி கண்டோபா தெய்வம் கூறியது. அதன்படி சீரடி மக்கள் அந்த இடத்தில் மண்வெட்டியால் தோண்டினார்கள்.

அந்த இடத்தில் ரகசிய அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பார்த்து சீரடி ஊர் மக்கள் திகைத்து போய் நின்றனர். அவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

அந்த சுரங்க அறை மீதிருந்த சமதள கல்லை அகற்றினார்கள். அங்கு ஒரு நிலைக் கதவு இருந்தது. அதில் 4 ஐந்துமுக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.


தரைக்குள் இருந்த சுரங்க அறையில் எப்படி விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன என்று சீரடி ஊர் மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். நிலவறையின் உள்பகுதியில் ஜெபமாலைகள், அவற்றை வைத்து ஜெபம் செய்யும் பசுமுக உருவப் பைகள், மரப்பலகைகள் காணப்பட்டன.

அவை என்ன என்று சீரடி ஊர் மக்களுக்கு முதலில் தெரியவில்லை. சாமி ஆடிய நபரிடம் இதுபற்றி கேட்டனர்.
அதற்கு சாமி ஆடியவர், இந்த அறைக்குள் தான், வேப்ப மரத்தடியில் உள்ள இளைஞன் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்தான் என்றார்.

அதைக் கேட்டதும் சீரடி மக்கள் கும்பலாக வேப்ப மரத்தடிக்கு வந்தனர். அங்கு இளம் பாபா ஏதும் அறியாதவர் போல ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

இளம் பாபாவின் தெய்வீகக்களைப் பொருந்திய முகம் இப்போது சீரடி மக்களுக்கு புதிய அனுபவத்தை தருவதாக இருந்தது. இளம் பாபாவை பார்க்க, பார்க்க அவர்களுக்குள் பயம் கலந்த மரியாதை ஏற்பட்டது.

அவர்கள் எழுப்பிய சத்தம் கேட்டு இளம் பாபா தியானத்தில் இருந்து விடுபட்டு கண்களைத் திறந்துப் பார்த்தார். அவரிடம் சீரடி மக்கள், சுவாமி… கண்டோபா தெய்வம் சொன்ன இடத்தில் தோண்டிய போது நீங்கள் 12 ஆண்டுகள் தவம் இருந்த இடத்தைப் பார்த்தோம். உண்மையில் நீங்கள் யார்? எப்போது இந்த ஊருக்கு வந்து தவம் இருந்தீர்கள்? என்று கேட்டனர்.


அதைக் கேட்டதும் இளம் பாபா மெல்ல புன்னகைத்தார். பிறகு அவர், நீங்கள் நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது. நீங்கள் பார்த்த சுரங்க அறை என் குருநாதர் தவம் இருந்த இடம். அது ஒரு புண்ணிய பகுதியாகும். அதை நன்கு பாதுகாக்க வேண்டும். எனவே அந்த அறையை முன்பு போல மூடி மறைத்து விடுங்கள். அதுதான் நல்லது என்றார்.

மேலும், காலம் வரும் போது நீங்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள் என்றார். இதையடுத்து சுரங்க அறை இருந்த இடத்தை மக்கள் முன் போலவே மூடி மறைத்து விட்டனர். அந்த இடம் தான் இப்போது குருஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. சீரடி மக்கள் தான் சொல்வதையெல்லாம் கீழ்படிந்து கேட்பது கண்டும் தன் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பது கண்டும் பாபா நெகிழ்ந்தார். அவர் உதடுகள் அல்லா மாலிக் என்றது. கண்களில் நீர் வழிந்தது.

சீரடி மக்களிடம் பாபா முதலில் எதையும் கேட்டுப் பெறவில்லை. அதிகமாக அவர் யாரிடமும் பேசாமலே இருந்தார். நாட்கள் செல்ல செல்ல பாபாவிடமும், சீரடி மக்களிடமும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. பாபாவிடம் சீரடி மக்கள் மனம் விட்டு பேசத் தொடங்கினார்கள். பாபாவும் பேசத் தொடங்கினார். சிலர் பாபாவிடம் குறி கேட்டனர். சிலர் நோய்களை தீர்க்கும்படி வேண்டினார்கள்.
நோயுடன் வந்தவர்களுக்கு மூலிகை மருந்துகள் கொடுத்து குணமடையத் செய்தார். இதனால் சீரடி மக்களில் ஒரு சாரார் பாபா சிறந்த மருத்துவர் என்று புகழத் தொடங்கினார்கள்.

கவலையோடு வந்தவர்களுக்கு, அவர்கள் வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என்று கூறி அனுப்பி வைத்தார். பாபா சொன்னது போலவே நடந்தது. இதனால் பாபாவை சித்தர் என்று மற்றொரு சாரார் கூறினார்கள். நாளடைவில் பாபாவை பார்க்க தினம், தினம் மக்கள் கூட்டம் திரண்டது. அவர்கள் யாரும் பாபா சாப்பிட்டாரா… இல்லையா என்ற நினைப்பே இல்லாமல் இருந்தனர்.

ஆனால் ஆமன் பாய் என்ற பெண் உள்ளன்புடன் பாபாவுக்கு தினமும் உணவு கொண்டு வந்து கொடுத்தாள். பாபா மீது அவள் அளவு கடந்த பாசமும், அன்பும் வைத்திருந்தாள்.

தன்னை யார் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மக்களிடையே தினமும் உணவு கொடுத்த ஆமன்பாய் மீது பாபாவுக்கு பரிவு ஏற்பட்டது. அம்மா… உன் அன்புக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அல்லா உனக்கு கருணை காட்டுவார் என்றார்.
அதற்கு ஆமன்பாய், சாமி…. நீங்கள் என் வீட்டுக்கு ஒருநாள் வர வேண்டும் என்றாள். அதை ஏற்று பாபா, ஒருநாள் அவள் வீட்டுக்குச் சென்றார்.


அப்போது ஆமன்பாய் பாபாவிடம், என் தோழியின் மகன் கடுமையான தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனை நீங்கள் தான் குணப்படுத்த வேண்டும் என்றாள்.

ஆமன்பாயின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாபா, பக்கத்து வீட்டில் இருந்த ஆமன்பாயின் தோழி மகன் கண்பத்தை சென்று பார்த்தார். பிறகு அவன் நோய் தீர்ப்பதற்கான நல்ல பாம்பு விஷம் உள்ளிட்ட பல பொருட்களை கலந்து மருந்து தயாரித்தார்.
அந்த மருந்து மூலம் இளைஞன் கண்பத்தை தாக்கியிருந்த தொழுநோய் குணமானது. அப்போது பாபா அவனுக்கு சில அறிவுரைகளை கூறினார்.

நீ நன்றாக குணமடைந்த பிறகு பெண்களிடம் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறினார்.

பாபாவின் அருளால் கண்பத்தை தாக்கியிருந்த தொழுநோய் இருந்த சுவடே இல்லாமல் மறைந்து போனது. சீரடி ஊர் மக்கள் இந்த அதிசயத்தை கண்டு வியந்தனர். பாபா புகழ் நாலாபுறமும் பரவியது. பாபாவிடம் ஆசி பெற வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இந்த நிலையில் பாபாவுக்கு கொடுத்த வாக்கை கண்பத் மீறினான். பெண்களுடன் மீண்டும் உறவு கொள்ள ஆரம்பித்தான். இதனால் அவனுக்கு மீண்டும் தொழுநோய் தாக்கியது. சிறிது நாளில் மரணத்தை தழுவினான்.

பாபா எச்சரிக்கையை மதிக்காததால் தான் இளைஞன் கண்பத்துக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று சீரடி மக்கள் பேசினார்கள். அவர்கள் தங்கள் மனக்குறை தீர பாபாவிடமே வந்தனர்.


அவர்களுக்கான ஆலோசனைகளை பாபா வழங்கினார். மகல்சபாபதி, காசிநாத், அப்பா ஜோத்லே மூவரும் தினமும் வேப்ப மரத்தடிக்கு வந்து பாபாவுக்கு தேவையான பணிவிடைகள் செய்தனர்.

இப்படி 6 மாதங்கள் கழிந்திருந்தன. திடீரென ஒருநாள் பாபாவை காணவில்லை. ஊர் முழுக்க தேடினார்கள். எங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பாபா சீரடியை விட்டு வெளியேறி எங்கோ சென்று விட்டார் என்பது உறுதியாக தெரிந்தது. மகல் சபாபதியும் அவர் நண்பர்களும் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.

வெளியூர்களில் இருந்து வந்த நோயாளிகள், வேப்ப மரத்தடியில் பாபாவை காணாமல் ஏமாற்றம் அடைந்தனர். சீரடி மக்கள் அனைவரும் தவித்தனர். சீரடி கிராமமே இருள் சூழ்ந்தது போன்று மாறி விட்டது.

மாதங்கள் பல உருண்டோடியும் பாபா பற்றிய எந்த தகவலும் சீரடி மக்களுக்கு தெரியவில்லை.

பாபா எங்கு போனார்? – Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.