குழம்பு சரியில்லை என கூறிய தாத்தா… பேரன் செய்த விபரீதம்…!


குடிபோதையில் குழம்பு சரியில்லை என்று மருமகளிடம் தகராறு செய்த தாத்தாவை மின்விசிறியால் அடித்துக்கொன்ற பேரனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் அனுப்பர் பாளையம் பாண்டியன் நகர் நேரு வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 80). இவர் தனது மகன் பாலகிருஷ்ணனுடன் வசித்து வந்தார். முதியவர் பொன்னுசாமிக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை தோறும் பணம் கொடுத்து அளவோடு குடித்து விட்டு பத்திரமாக வீட்டுக்கு திரும்புமாறு குடும்பத்தினர் கூறி வந்தனர்.

அதன்படி நேற்று மாலை ரூ.300 பணம் கொடுத்து மதுக்குடிக்க அனுப்பினர். மதுக்கடைக்கு சென்ற முதியவர் அங்கு மதுவாங்கி குடித்தார். மதுக்குடித்த பின்னர் போதை தலைக்கேறியது. நள்ளிரவு 12 மணிக்கு போதையுடன் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். இதனையடுத்து அவரது மருமகள் தேவி கதவை திறந்தார்.

தனக்கு பசிக்கிறது சாப்பாடு போடு என்று கூறினார். மருமகள் முதியவருக்கு சாப்பாடு பரிமாறினார். ஒருவாய் சாப்பிட்டதும் குழம்பு சரியில்லை. என்ன குழம்பு வைத்தாய்? என்று தகராறு செய்தார். மருமகள் அவரை சமாதானம் செய்தார். இருந்தாலும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு படுத்திருந்த தேவியின் மகன் மோகன்ராஜ் (25) எழுந்து நாங்களும் இதைத்தான் சாப்பிட்டோம். நான்றாகத்தான் இருந்தது. ஏன் இந்த வயதில் நடுராத்திரியில் சத்தம்போடுகிறீர்கள்? பேசாமல் சாப்பிட்டுவிட்டு படுங்கள் தாத்தா என்று கூறினார். சமாதானம் அடையாத தாத்தா பேரனிடமும் தகராறு செய்தார். மோகன்ராஜ் அமைதியானார்.

இதைத்தொடர்ந்து சாப்பாடு, குழம்பு சரியில்லை என்று தொடர்ந்து மருமகள் தேவியிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பேரன் அருகில் இருந்த மின்விசிறியை (டேபிள் பேன்) எடுத்து தாத்தாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலையான முதியவர் பொன்னுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பேரன் மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!