ராஜபக்ச பிரதமரானது எப்படி..? போட்டு உடைக்கும் நமல் ராஜபக்சே..!


இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார். ஆனால் நான் பிரதமராக தொடர்ந்து நீடிக்கிறேன். எனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று விக்ரமசிங்கே கூறி வருகிறார்.

இந்தநிலையில் ராஜபக்சே உடனடி பலப்பரீட்சையை தவிர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா 16-ந்தேதி வரை முடக்கி வைப்பதாக அறிவித்தார்.

இதற்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதனால் இலங்கையில் அரசியலில் நெருக்கடியான சூழல் காணப்படுகிறது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் பிரதமர் ராஜபக்சே வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) நாடாளுமன்றம் கூடும் என்று தெரிவித்தார். பின்னர் ராஜபக்சேயின் ஆதரவாளர்கள் இதை மறுத்தனர்.

அதேநேரம் 16-ந்தேதிக்கு முன்பாக நாடாளுமன்றம் கூட்டப்பட மாட்டாது என்று அதிபர் சிறிசேனா கட்சியினர் தெரிவித்தனர். இதனால் அதிகாரபூர்வமாக நாடாளுமன்றம் எப்போது கூடும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையே, ராஜபக்சே ஆதரவாளர்கள் ஒரு எம்.பி.க்கு இந்திய மதிப்பில் ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை பேரம் பேசி பெரும்பான்மைக்கு தேவையான எம்.பி.க்களை இழுக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தற்போது ராஜபக்சேவுக்கு 100 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. ராஜபக்சேவின் அணிக்கு 5 எம்.பி.க்கள் தாவிய பிறகு விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 101 எம்.பி.க்களும் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 எம்.பி.க்களும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனாவிற்கு 6 எம்.பி.க்களும் இதர 2 சிறு கட்சிகளுக்கு தலா ஒரு எம்.பி.யும் உள்ளனர்.

இலங்கையில் தற்போது ஏற்பட்ட அரசியல் நிகழ்வுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டதாக இந்திய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மஹிந்த தரப்புடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. சதித் திட்டம் தீட்டப்பட்டு சுமார் நான்கு மாதங்களுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டதாக இந்திய ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சே மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தொடர்ந்து 4 மாதங்கள் ஆட்சி மாற்றம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சே இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றில்பணியாற்றும் ஊடகவியலாளர் ஸ்ரீனிவாசன் ஜெயின், நமல் ராஜபக்சவை சுட்டிக்காட்டி டுவிட்டரில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.-source : dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!