பித்ரு பூஜை செய்வதால் என்ன நன்மை தெரியுமா?


சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் பூமியிலேயே சுற்றுகிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றை போக்குவதற்காகத்தான் பித்ரு பூஜைகள் செய்கிறோம்.

பத்தாவது நாள் ஆத்மாவுக்கு கட்டை விரல் போன்ற அளவு சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.


பல கிரகங்களைக் கடந்து ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீரூற்றுக்களும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது.

ஆறுமாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள், திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை உண்டு மனநிறைவு பெற்று தங்களுக்கு பக்தியுடன் உணவளித்த தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.


சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறது. உடலைத் துறந்த ஓராண்டு முடிவில் அதே திதியன்று தர்ம தேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது.

பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைபிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, பித்ரு பூஜைகளை தவறாது செய்தல் போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவன்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.


பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள். பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு இதற்காகவே படைக்கப்பட்ட பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன. அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்து விடுகின்றனர்.

நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தை செய்து அதன் பலனாக பிறப்பு, இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால் அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு அதற்கு பிரதிபலனாக பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான். நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாததால் பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்ய வேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!