7 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை – நாடகமாடிய தந்தை சிக்கினார்..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி வடக்கு தெருவில் வசிக்கும் மணிகண்டன் என்பவரின் 7 மாத குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தது. இதனிடையே குழந்தை கொலை செய்து புதைக்கப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் புகார் கொடுத்தார். அதன்பேரில் கடந்த சனிக்கிழமை புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் போலீசாரால் தோண்டி எடுக்கப்பட்டு பின்னர் உடல்கூறு ஆய்வுக்கு திருச்சிக்கு அனுப்பப்பட்டது.

இதனிடையே குழந்தை இறந்த அன்று தந்தை மணிகண்டனும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 6 நாட்களாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே குழந்தை இறந்ததில் போலீசாருக்கு தந்தை மணிகண்டன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் அவரிடம் மீன்சுருட்டி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

இதனையடுத்து குடிபோதையில் இருந்தபோது பெற்ற குழந்தையை தானே கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்தை மணிகண்டன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதனால் மணிகண்டன் மீது கொலை மற்றும் கொலையை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

சமீபத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தையின் உடல் நாயிடம் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. இதேபோல பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிச் செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 7 மாத பெண் குழந்தையை தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ஜெயகொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: PUTHIYATHALAIMURAI

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!