இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவின் சஹசக 2017 இல் நடைபெற்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மட்டத்திற்கான போட்டியில் விவசாயத் துறையில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதற்கிணங்க சர்வதேச ரீதியான போட்டியில் பங்குபற்றுவதற்காக மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவர்களான வி.கேஷான் குமார், வி.விஜித்குமார் சகோதரர்கள் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி தாய்வான் பயணமாகின்றனர்.
கேஷான் குமார் 2016 ஆம் ஆண்டு புத்தாக்குநர் வேலைத்திட்டத்தின் கீழ் நடந்த போட்டியில் தூசு அகற்றும் ரொபோ கருவி ஒன்றை செய்து தேசிய மட்டம் வரை பங்குபற்றினார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வி.கேஷான் குமார், வி.விஜித்குமார் சகோதரர்கள் இலத்திரனியல் பழம் பறிக்கும் கருவி ஒன்றை செய்து பாடசாலை மட்டத்திலும், வலய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டத்தில் அகில இலங்கை ரீதியாக விவசாயத் துறைக்கான புத்தாக்குநர் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தாய்வானில் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டியில் பங்குபற்ற உள்ளனர்.
சர்வதேச ரீதியாக இம் மாணவர்களை பங்குபற்ற செய்யும் முயற்சியில் மாணவர்களின் பெற்றோரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. மேலும் இவர்களின் புத்தாக்க செயற்பாட்டு கருவியை மெருகூட்டி தேவையான ஆலோசனைகளை வழங்கி ஊக்குவித்தவர்கள் கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர், விஞ்ஞான பாட ஆசிரியர்கள் ஆகியோர் ஆவர்.
இம்மாணவர்கள் தமது பெற்றோருக்கும், பாடசாலைக்கும் மற்றும் எமது நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். சர்வதேச ரீதியிலும் இப்போட்டியில் வெற்றி வாகைசூட கல்லூரியின் சார்பாக அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்துகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!