சீனாவில் மாயமான இண்டர்போல் தலைவர் சிறைவைப்பா?

மாயமான இண்டர்போல் தலைவரின் தற்போதைய நிலை பற்றிய விளக்கமான தகவல்களை அளிக்கும்படி சீனாவுக்கு இண்டர்போல் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

மாயமான இண்டர்போல் தலைவர் சீனாவில் சிறைவைப்பா?
பெய்ஜிங் :

பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார்.

இதற்கிடையே, இண்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். தனது கணவரை செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை என அவர் அளித்த புகார் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லியான்ஸ் நகரில் மெங்க் ஹாங்வே வசித்து வந்துள்ளார். அவர் சீனாவை சேர்ந்தவர். சீனாவில் பாதுகாப்புக்கான துணை அமைச்சராகவும் செயல்பட்டு வந்துள்ளார். மெங்க் ஹாங்வே செப்டம்பர் 29ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவுக்கு பயணம் மேற்கொண்டது முதல் அவரை காணவில்லை என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில், இண்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேவை, விசாரணைக்காக சீன போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் அவர் சீனா சென்றதுமே நேரடியாக, சீனாவின் ஒழுங்கு முறை அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டதாக ஹாங்காங்கில் இருந்து வெளி வரும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கம்யூனிச சிந்தாந்தப்படி இயங்கி வரும் சீனாவில் இதைப்போன்று அரசியல் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் அவ்வப்போது ரகசியமான முறையில் கைது செய்யப்படுவதும், தனிமையான இடத்தில் வைத்து விசாரிக்கப்படுவதும் இயல்பான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. – Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்