காதலனுடன் சுற்றுலா வந்த இளம்பெண்ணுக்கு ஏற்காட்டில் நடந்த கொடூரம்.. சிக்கிய டிரைவர்கள்..!


ஈரோட்டை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது32). திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது காதலியுடன் கடந்த 26-ந் தேதி ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தார்.

இருவரும் ஏற்காட்டை சுற்றி பார்த்த பின்னர் அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர். அப்போது வாசுதேவன் மது அருந்தினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபம் அடைந்த காதலி தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டு அண்ணா பூங்கா பகுதிக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து வாசுதேவன் வந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜெரினாக்காட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜயகுமார் (37), மற்றும் கார் ஓட்டுனர் ஆரோக்கியதாஸ் (32) ஆகிய இருவரும் வாசுதேவனின் காதலியிடம் என்ன தகராறு என நைசாக பேச்சு கொடுத்தனர்.

அவர் பேசிக்கொண்டிக்கும் போது வாசுதேவன் அங்கு வந்தார். 2 பேரையும் போலீஸ் நிலையத்தில் கொண்டு விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றிய அவர்கள் வாசுதேவன் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து விட்டு அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளினர்.

பின்னர் டிரைவர்கள் 2 பேரும் சேர்ந்து வாசுதேவனின் காதலியை சேலத்தில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றனர், ஆரோக்கியதாஸ் பாதி வழியில் இறங்கிவிட்டார்.

விஜயகுமார் ஏற்காட்டில் தனக்கு தெரிந்த தங்கும் விடுதிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். பின்னர் நேற்று அதிகாலை 1.45 க்கு அந்த பெண்ணை சேலம் புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு ஏற்காடு வந்தார்.

இது குறித்து வாசுதேவன் ஏற்காடு போலீஸ் நிலையத்திலும், வாசுதேவனின் காதலி சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் காவல் புகார் கொடுத்தனர்.

ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஒண்டிக்கடை பகுதியில் இருந்த விஜயகுமார் மற்றும் ஆரோக்கியதாஸ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரனை நடத்தினர். மேலும் சேலம் ரூரல் டி.எஸ்.பி. சூர்ய நாரயணன் ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு வந்து அவர்களிடம் விசாரனை நடத்தினார்.

விசாரணை முடிவில் விஜயகுமார் மீது கற்பழிப்பு, வழிப்பறி, மிரட்டல் ஆகிய பிரிவுகளிலும், ஆரோக்கியதாஸ் மீது வழிப்பறி, மிரட்டல் ஆகிய பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் இன்று சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!