கஞ்சா போதையில் அண்ணியை கத்தியால் குத்தி கொலை – இளைஞர் தப்பியோட்டம்!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள வாழக்கட்டைக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஒன்டிமுத்து. இவருக்கு அன்புசெல்வன் (45). ராக்கி (எ) பாலசந்தர் (35) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

ஒன்டிமுத்துவின் இரு மகன்களுக்கும் திருமணமாகியுள்ள நிலையில், ராக்கிக்கு அதிகளவில் குடிப்பழக்கம் இருப்பதாகக் கூறி, அவரது மனைவி பிரிந்துச் சென்று கடந்த ஆறு மாதங்களாக தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், அதேப் பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரிடம் கடனாகப் பணத்தைப் பெற்று புதிய பைக் ஒன்றை ராக்கி வாங்கியுள்ளார். வாங்கிய கடனை சரிவர செலுத்தவில்லை எனக் கூறி சரவணன் பைக்கை பறிமுதல் செய்தார்.

அதன் காரணமாக ராக்கிக்கும், சரவணனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறின் போது, ராக்கியின் அண்ணி ராஜலட்சுமி, தடுக்காமல் வேடிக்கைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராக்கி அவரைக் கஞ்சா போதையில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதில் பலத்த காயமடைந்த ராஜலட்சுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுப் பணிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவுச் செய்து தப்பியோடிய ராக்கியைத் தேடிவருகின்றனர். – Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.