காதலனின் பிறந்த நாளைக் கொண்டாட இளம்பெண் செய்த தில்லாலங்கடி வேலை..!


சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் கடந்த ஞாயிறன்று தனது ஸ்கூட்டரில் ஏழுகிணறுப் பகுதியில் சென்றுள்ளார். அப்போது அவரை வழி மறித்த இளம் பெண், தனது தாய்க்கு உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல இருசக்கர வாகனம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

அதற்கு தினேஷ் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவரை விடாத அப்பெண், போன் நம்பரைக் கொடுத்து தினேஷின் நம்பிக்கையைப் பெற்றார். எண்ணை உறுதிச் செய்த அவர் அப்பெண்ணிடம் பைக்கை கொடுத்தார்.

அரை மணி நேரத்தில் திரும்பி வருவதாகக் கூறிய அப்பெண், அதிக நேரமாகியும் திரும்பவில்லை. மேலும், அவரின் போன் நம்பரை தொடர்புகொண்ட போது, போன் அணைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், போன் நம்பரை வைத்து டிராக் செய்தனர்.

அதில், அப்பெண் தடா பகுதியில் இருந்ததையும், சில மணி நேரத்தில் அவர் சென்னையின் எள்ளைப் பகுதிக்குள் வந்ததையும் காட்டியது.

அப்போது அவரை வரும் வழியிலேயே மடக்கிப் பிடித்த போலீஸார், திருட்டு குறித்து விசாரித்தனர். அதில், தனது காதலனின் பிறந்தநாளைக் கொண்டாட தடா சென்றதாகவும், அதற்கு அவர்களிடத்தில் வாகனம் இல்லாத காரணத்தால் தினேஷை ஏமாற்றி ஸ்கூட்டரை எடுத்து சென்றதையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து வாகனத்தை மீட்ட போலீஸார், தினேஷிடம் ஒப்படைத்தனர். பின்னர், தினேஷ் கேட்டுக்கொண்டதை அடுத்து அப்பெண் மற்றும் அவரது காதலனை தண்டிக்காமல் எச்சரித்துவிட்டு அனுப்பி வைத்தனர்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!