இந்திய அணி கோலியை நம்பிதான் இருக்கிறது – கபில்தேவ் அதிரடி


விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது .

இதன் 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

5 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் 2 டெஸ்டிலும் இந்தியா தோற்றது. 3-வது டெஸ்டில் வெற்றி பெற்றது. சவுதம்டனில் நடந்த 4-வது டெஸ்டில் இந்திய அணி 60 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதன்முலம் டெஸ்ட் தொடரை இழந்தது.

இங்கிலாந்தில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது:-

விராட்கோலியை நம்பியே இந்திய அணி இருக்கிறது. கிரிக்கெட் என்பது குழு விளையாட்டாகும். ஒருவரை மட்டுமே அணி நம்பி இருக்கக்கூடாது. எல்லோரும் இணைந்து ஆட வேண்டும்.

விராட்கோலி முக்கியமான வீரர் ஆவார். நீங்கள் முக்கியமான வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள். ஒரு வீரரை நம்பி இருக்கும் போது கடினமான சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. கூட்டாக விளையாடினால் மட்டுமே வெற்றி பெற இயலும்.

இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணியைவிட அவர்கள் நன்றாக ஆடுவார்கள்.

ஆனாலும் நமது அணி இங்கிலாந்தை விட சிறப்பானதாகவே இருக்கிறது. தவறுகளில் இருந்து பாடம் கற்பது முக்கியமானது. நாம் சிறந்த நிலையை அடைய வேண்டுமானால் அடிக்கடி தவறுகள் செய்யக்கூடாது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணி மீண்டும் எழுச்சி பெற இந்திய வீரர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். இதை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி 2 சதம், 3 அரைசதம் உள்பட 544 ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!