கந்து வட்டி கொடுமை… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி..!!


தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சுகதா (40). இவர்களுக்கு வைஷ்ணவி (16), வைசாலி (14) என்ற இரு மகள்கள் உள்ளனர். வைஷ்ணவி பிளஸ்-1 படித்து வருகிறார். வைசாலி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சரவணன் ஒருவரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. வட்டிக்கு பணம் கொடுத்தவர், ஆட்களுடன் வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால், மனம் உடைந்த சரவணன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் சரவணன், சுகதா ஆகியோர் விஷம் குடித்தனர்.

பின்னர் மனதை கல்லாக்கி கொண்டு தங்களின் மகள்களுக்கும் விஷம் கொடுத்தனர். அப்போது தற்செயலாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சரவணன் வீட்டுக்கு வந்தபோது, அங்கு 4 பேரும் விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர். சிகிச்சை பெற்று வருகிற சுகதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனது கணவர், போடி சிலமலையை சேர்ந்த பகவதிமுத்து மகன் சுருளிராஜன் என்பவரிடம் வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். இதில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் வரை திருப்பிக் கொடுத்து விட்டோம். கொடுத்த தொகையை வட்டிக்கு கழித்து விட்டதாகவும், இன்னும் ரூ.2 லட்சம் தரவேண்டும் என்றும் சுருளிராஜன் கூறினார்.

இந்தநிலையில் அவர், அதே பகுதியை சேர்ந்த செல்வம், லட்சுமணன் (42), முத்துராமலிங்கம், சங்கரநாராயணன், காளியப்பன் (52) ஆகியோருடன் எங்களது வீட்டுக்கு வந்து பணத்தை கேட்டு தகராறு செய்தார். அப்போது அவர்கள் தரக்குறைவாக பேசி, சாதியை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

இதற்கிடையே சரவணனின் உறவினர்கள் சுமார் 50 பேர், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தகவல் அறிந்ததும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜா, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவானந்தம் ஆகியோர் அங்கு வந்து, முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சுகதா அளித்த புகாரின் அடிப்படையில் சுருளிராஜன், செல்வம், லட்சுமணன், முத்துராமலிங்கம், சங்கரநாராயணன், காளியப்பன் ஆகிய 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் லட்சுமணன், காளியப்பன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!