தேங்காய் உடைக்கும்போது அழுகி இருந்தால் அபசகுணமா..? ஆபத்தா..?


தேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி இருக்கலாம்.இது போன்ற சில நிகழ்வுகள் நம் மனதை சஞ்சலப்படுத்தும். எனவே, தேங்காய் எப்படி உடைந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

சிதறு தேங்காய் உடைக்கும்பொழுது சகுனம் பார்க்க வேண்டியதில்லை. தேங்காய் அழுகி இருப்பின் நினைத்த காரியங்கள் சற்று தள்ளிப் போகும்.

நாம் அர்ச்சனைக்குக் கொடுத்த தட்டு மாறி வந்தால், அதை நாம் அபசகுனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.அதேபோல் ஆலயத்தில் உடைக்கும் தேங்காய்க்கும் சகுனம் பார்க்கத் தேவையில்லை.
சகுனம் பார்ப்பதற்காக உடைக்கப்படும் தேங்காய், அது உடையும் முறையைப் பொறுத்து நமக்குப் பலன்களைத் தரும்.


தேங்காய் சரிபாதியாக உடைந்தால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
தேங்காயின் மேல்பகுதி அதாவது கண்பாகம் உள்ள பகுதி பெரிதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்தால் இல்லத்தில் செல்வம் பெருகும்.

கண்பகுதி சிறியதாகவும் கீழ்ப்பகுதி பெரியதாகவும் உடைந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்னைக்கு உரிய விஷயங்கள் தீர்ந்து இல்லத்தில் அமைதி பெருகும்.

தேங்காய் உடைக்கும்போது ஒரு சிறிய பாகம் அதனுள் விழுந்தால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிச்சயம் உருவாகும்.

சகுனத்துக்கு உடைக்கும் தேங்காயின் உட்புறம் பூ இருப்பின் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்,தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்சனைகள் உருவாகும்.