பீகார் அரசு தத்தெடுப்பு மையங்களில் வாழும் குழந்தைகளுக்கு இப்படியொரு நிலைமையா..?


பீகாரில் பாதுகாப்பு இல்லங்களில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்ட சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பீகாரில் அரசு நடத்தும் சிறப்பு தத்தெடுப்பு மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி டாடா சமூக அறிவியல் அமைப்பு பட்டியலிட்டு உள்ளது.

இதற்காக பீகாரின் 20 மாவட்டங்களில் உள்ள 21 அரசு நடத்தும் சிறப்பு தத்தெடுப்பு மையங்களில் இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த மையங்களில் அநாதைகள், வீட்டை விட்டு ஓடியோர், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர் மற்றும் பிறர் என 0-6 வயது வரையிலான குழந்தைகள் தங்கி உள்ளனர். இந்த மையங்களில் 70 சதவீதம் சிறுமிகள் உள்ளனர்.

இதில் 3 வயது உடைய சில குழந்தைகள் பேசுவது இல்லை. ஏனெனில் இங்கு முறையான பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லை. அவற்றுடன் குழந்தைகள் பேசுவதற்கு என ஆட்களும் இல்லை.

இங்குள்ள குழந்தைகள் குளியல் அறையில் அடைத்து வைத்தல், சிட் அப்புகள் (அமர்ந்து எழுவது) செய்ய வைத்தல், தனிமையில் இருக்க வைத்தல், தகாத சொற்களால் திட்டுதல் என கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளன. அதிக வருந்தத்தக்க வகையிலான இந்த தண்டனைகளால் குழந்தைகள் நீண்ட கால பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என அறிக்கை குழுவின் தலைவர் முகமது தாரீக் கூறியுள்ளார்.

இவர்கள் மிக சிறியவர்கள். குளியல் அறையில் அடைத்து வைப்பது அவர்களை மனதளவில் கடுமையாக பாதிக்கும். எதற்காக தண்டனை வழங்குகிறார்கள் என்பது கூட அவர்களுக்கு புரியாது என வருத்தத்துடன் முகமது கூறுகிறார்.

இந்த குழந்தைகளுக்கு முறையான மருத்துவ வசதிகளும் இல்லை. இதனால் அவர்களின் வாழ்நாள் பற்றிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

இங்கு தத்தெடுக்க வரும் பெற்றோர் சிலரால், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சில குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை திட்டுவது கூடாது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவதற்கு ஆள் இல்லாதது குழந்தைகளை வருத்தமடைய செய்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சில மையங்களில் குழந்தைகள் தங்குவதற்கு உரிய சரியான உட்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லை. இங்கு உள்ள குழந்தைகள் மகிழ்ச்சியற்று, அதிக பசியுடன் உள்ளனர் என்றும் இந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!