காதலில் ஏமாற்றம்… காதலன் வீட்டு முன்பு அமர்ந்து காதலி தர்ணா போராட்டம்..!!


கடலூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் சிவகலா (வயது 25). கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். ராஜ்குமாரும் சிவகலாவும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் சிவகலாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். இதனால் சிவகலா தனது காதலன் ராஜ்குமாரிடம் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். ஆனால் அவர் திருமணம் செய்ய முடியாது என்று கூறி மறுத்து விட்டார். தன்னை காதலித்து விட்டு ராஜ்குமார் திருமணம் செய்ய மறுக்கிறாரே என்று எண்ணி சிவகலா மனம் வருந்தினார்.

இது குறித்து சிவகலா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், நானும், ராஜ்குமாரும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்தார். இப்போது என்னிடம் பேச கூட மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ராஜ்குமாருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை.

இதையடுத்து சிவகலா நேற்று ராமாபுரத்தில் உள்ள தன் காதலன் ராஜ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து சிவகலா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் இரவு வரை தர்ணா செய்தார். இந்த சம்பவம் ராமாபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!