ஏரிக்கரையில் பிணம்- புதுமாப்பிள்ளை கொலையில் 4 பேர் சிக்கினர்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த பில்லாதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் புஷ்பராஜ் (வயது 32). இவருடைய மனைவி புனிதா (26). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புஷ்பராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 20-ந் தேதி வேலைக்கு சென்ற புஷ்பராஜ் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

நேற்று முன்தினம் காஞ்சீபுரம் மாவட்டம் கோளிவாக்கம் ஏரிக்கரையில் புஷ்பராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு புஷ்பராஜின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

உடலை பெற்றுக்கொண்டு அவர்கள் ஊருக்கு வந்தனர். இதனையடுத்து வெம்பாக்கம் – காஞ்சீபுரம் சாலையில் புஷ்பராஜின் உடலை நடுரோட்டில் வைத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், செய்யாறு இன்ஸ்பெக்டர் சாரதி, காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக காஞ்சீபுரம் போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். -Source:Maalaimalar


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.