கள்ளக் காதலால் நடந்த விபரீதம் – கூலிப்படையை ஏவி ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய மனைவி…!


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படைக்கு ரூ.1 லட்சம் பேரம் பேசி ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்த புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 45). ஆட்டோ டிரைவர். தே.மு.தி.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இவருடைய மனைவி ஆலயமணி(32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கலியமூர்த்தி புத்தூரில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி தனது மனைவி, 2 குழந்தைகளையும் திருநள்ளாறு கோவிலுக்கு வாடகை காரில் அனுப்பி வைத்தார். அதன்பிறகு அவர் தோட்டத்து வீட்டில் தங்கி இருந்தார். மறுநாள் காலை வெகுநேரமாகியும் கலியமூர்த்தி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கதவு திறந்து கிடந்தும் பசுமாட்டிற்கு பால் கறக்க அவர் வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த காங்கம்மாள் என்பவர், கலியமூர்த்தி வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கே உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் நிர்வாண கோலத்தில் கலியமூர்த்தி பிணமாக கிடப்பதை பார்த்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது கணவர் கோவிந்தன், கலியமூர்த்தி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இது குறித்து தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தலைவாசல் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த கலியமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆலயமணி தனது குழந்தைகளுடன் வீடு திரும்பினார். கணவர் இறந்ததை அறிந்து அவர் கதறி அழுதார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஆலயமணி முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் இந்த கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதை உறுதி செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அது பற்றிய விவரம் வருமாறு:-

ஆலயமணி மகளிர் சுயஉதவிக்குழுவில் இருக்கிறார். இதனால் கடன் விஷயமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதிக்கு சென்ற போது அங்கு சுற்றுலா வேன் ஓட்டும் டிரைவரான ஏமாத்தேர் கிராமத்தை சேர்ந்த தேன்குமார்(32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஜவுளிக்கடைகளில் துணி எடுப்பதற்காக அடிக்கடி ஆலயமணி கள்ளக்குறிச்சி சென்றார். அவரை அங்கு தேன்குமார் தனது வேனில் அழைத்து கொண்டு ஜவுளிக்கடைகளுக்கு செல்வதோடு மட்டுமின்றி பல இடங்களுக்கு அழைத்து சென்று இருவரும் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.


ஆலயமணியும் தனது கணவர் வீட்டில் இல்லாத போது கள்ளக்காதலன் தேன்குமாரை புத்தூரில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களது பழக்கம் அக்கம், பக்கத்தினர் மூலமாக கணவர் கலியமூர்த்திக்கு தெரிய வந்தது. இதனால் கலியமூர்த்தி, தனது மனைவியை கண்டித்தார். மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்த மனைவி நிறைய கடன்கள் வாங்கி இருப்பதை அறிந்து எதற்காக கடன் வாங்கினாய் என்று விசாரித்த போது, அவர் தனது கள்ளக்காதலன் தேன்குமாருக்கு கடன் வாங்கி கொடுத்தது தெரிய வந்தது. உடனே கலியமூர்த்தி, தேன்குமாரிடம் பணத்தை திரும்ப தருமாறு கேட்டு உள்ளார். இதன் காரணமாக தேன்குமாருக்கு கலியமூர்த்தி மீது விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் தேன்குமாருடன் நெருங்கி பழகுவதை தனது கணவர் தடுத்து வந்ததால் ஆத்திரம் அடைந்த ஆலயமணி அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதற்காக கள்ளக்குறிச்சி சென்ற போது தேன்குமாரை சந்தித்து நாம் பழகுவதற்கு கணவர் இடையூறாக இருப்பதால் அவரை கொன்று விடுவோம். உன்னை நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

தேன்குமாரும், தான் வாங்கிய கடன் தொகையை திரும்ப கேட்டு கொண்டே இருப்பதால் கலியமூர்த்தியை கொலை செய்ய திட்டம் வகுத்தார். அதன்படி சம்பவத்தன்று ஆலயமணி தனது குழந்தைகளுடன் திருநள்ளாறு சென்ற பிறகு தேன்குமார், தனது ஊரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(வயது 19), இன்னொரு 17 வயது சிறுவன் ஆகிய 2 பேருடன் சேர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் புத்தூர் வந்து உள்ளனர். அங்கு தேன்குமார் வீட்டுக்கு வெளியே யாராவது வருகிறார்களா? என்று காவல் காக்க, ஹரிகிருஷ்ணனும், 17 வயது சிறுவனும் வீட்டுக்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டு இருந்த கலியமூர்த்தியை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

கலியமூர்த்தியை கொலை செய்வதற்காக கூலிப்படையை சேர்ந்த ஹரிகிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் பணம் தருவதாக ஆலயமணி கூறி இருக்கிறார். 17 வயதான சிறுவனுக்கு தனது கணவர் பயன்படுத்தி வரும் சரக்கு ஆட்டோவை தருவதாக கூறி கலியமூர்த்தியை கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்து உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து கலியமூர்த்தி கொலை செய்த வழக்கில் அவரது மனைவி ஆலயமணியை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நின்றிருந்த கூலிப்படையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான தேன்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.-
Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!