போராடுவதில் அலாதி பிரியம் கொண்டவர்கள் தனுசு ராசி குழந்தைகளாம்…!!


சவால்களை வென்று சாதனை படைக்கும் தனுசு ராசியில் பிறந்த குட்டீஸ், நீங்க எப்படிப்பட்டவங்க தெரியுமா? தனுசு ராசியின் சின்னமே போர்க் கருவியான வில்லைக் குறிப்பதால், எதையுமே போராடிப் பெறுவதில் தனி சுகம் காண்பீர்கள். உங்கள் இலக்கு எல்லாம் சாதாரணமாக இருக்காது. சவாலான விஷயங்களை நோக்கித்தான் உங்கள் இலக்குகள் இருக்கும்.

தனுசு ராசி பொன்னிற மஞ்சள் நிறமுடைய ஆண் ராசியாகும். ராசி மண்டலத்தில் 9வது ராசியாகும். தனுசு ராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். தனுசு ராசி கால புருஷனனின் அங்க அமைப்பில் இரு தொடைகளையும் குறிக்கும் மூன்றாவது உபயராசியாகும்.

மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்.


எலுமிச்சை நிறம் கவர்ச்சியான தோற்றம்
இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் நல்ல உயரமாகவே இருப்பார்கள். உடல் நிறமும் எலுமிச்சம் பழம் போல கவர்ச்சிகரமாகவே இருக்கும். முட்டை வடிவ முகத்தோற்றம் கொண்டவர்கள். கூர்மையான மூக்கும், கனிவான பார்வையும் கொண்டவர்கள். நீண்ட கழுத்து அமைந்திருக்கும். சிரித்த முகம், கவர்ச்சியான தோற்றம் கொண்ட உங்களின் பேச்சு அனைவரையும் எளிதில் வசீகரிக்கும்.

உதவும் குணம்
பேசும் போதும் சத்தமாக பேசும் குணம் படைத்தவர்கள் என்பதால் நீங்கள் பேசுவது மற்றவர் பார்வைக்கு கட்டளையிடுவது போல இருக்கும். யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது உங்களுக்கு முடியாத காரியம். கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் உங்களிடம் எந்த ரகசியமும் இருக்காது. உங்களிடம் அன்பாக பழகினால் எதையும் சாதித்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட நீங்கள் இந்த குணத்தினாலேயே அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வீர்கள்.

புத்திசாலிகள்
தனுசு ராசிக்காரர்கள் பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்ட ஏகலைவனைப் போல பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் புத்திசாலிகளாகவும் விளங்குவீர்கள். சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வீர்கள்.


சுறுசுறுப்பு திலகம்
அறிவுச் சுரங்கமான பிரகஸ்பதியின் ஆளுமைத்திறன் அதிகமுள்ள தனுசு ராசியில் பிறந்த நீங்கள் ஊர்ப் பிரச்னை, உலகப் பிரச்னைகளையெல்லாம் தீர்த்து வைப்பீர்கள். வீட்டுப் பிரச்னை என்று வரும்போது, உங்கள் ஆலோசனைகளை யாரும் ஏற்பதில்லையே என்று வருந்துவீர்கள். உங்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது. நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பீர்கள்.

ஆசிரியர் பணி
உங்கள் ராசிநாதனான குருவும், பத்துக்குரியவனான புதனும் பகையாளிகளாக இருப்பதால் ஆரம்பத்தில் எந்த வேலையிலும் விருப்பம் இல்லாமலேயே இருப்பீர்கள். படிப்பது ஒன்றாகவும், பார்க்கும் வேலை வேறொன்றாகவும் இருக்கும். பெரும்பாலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் பணி, விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபடும் பணி, அரசு வழியில் கௌரவமாக பணிகள் அமைந்திடும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய வக்கீல் பணி, ராணுவம் தீயணைப்புத்துறை, கணக்கு, கம்ப்யூட்டர் துறை, மற்றும் நல்ல பண பழக்கமுள்ள இடங்களில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். நீங்கள் செய்யும் தொழில் சிறிதோ, பெரிதோ அதை ஈடுபாட்டுடன் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள்

பணநடமாட்டம் அதிகம்
தனகாரகனான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், பணத்தின் பின்னால் ஓடமாட்டீர்கள். உங்களுக்குப் பணத்தைவிட மனம்தான் பெரிதாக இருக்கும். சிறு வயதிலிருந்தே வசதி வாய்ப்புகளுடன் வாழ்வீர்கள். பண நடமாட்டம் எப்பொழுதும் உங்களுக்கு தடையின்றி அமையும். உங்களுடைய வாழ்க்கை வசதிக்கு தக்கவாறு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பண வரவுகளில் தடை ஏற்பட்டாலும் வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொள்ள விரும்ப மாட்டீர்கள்.


தனித்துவமான குழந்தைகள்
வில்லின் ராசியில் பிறந்த நீங்கள் ஆக்கவும் தெரிந்தவர்கள், அழிக்கவும் தெரிந்தவர்கள். எதையும் எதிர்க்கவும் துணிந்தவர்கள். வளைந்து கொடுக்கத் தெரியாததால் சில வசதி, வாய்ப்புகளை வாழ்க்கையில் இழக்க நேரிடும். தனியாக இருக்கும் நேரத்தில் தனித்துவத்தோடு யோசிக்கும் நீங்கள், நட்பு என்கிற பெயரில் கூட்டத்தோடு சேர்ந்தால் மாறிப்போவீர்கள். உங்களுக்குப் பிடித்தவர்களுக்காக எதையும் செய்யத் துணிவீர்கள். நீங்கள் ஒருவரை எதிரியாக நினைத்து விட்டால், வாழ்நாள் முழுவதும் அவர்கள் செய்த துரோகத்தை மறக்கவும் மன்னிக்கவும் மாட்டீர்கள்.

அலர்ஜி ஏற்படும் ஜாக்கிரதை
பீட்சா, பர்கர், பாஸ்ட் ஃபுட், பால் பொருட்கள் சம்பந்தமான உணவுகளையே விரும்பி உண்பவராக இருப்பீர்கள். எனவே அங்கங்கே கொழுப்புக் கட்டிகள் வர வாய்ப்பிருக்கிறது. உணவுப் பழக்கங்களில் அதீத கவனம் வேண்டும். பொதுவாக உங்களின் சருமம் ரொம்ப சென்சிட்டிவாக இருப்பதால் அலர்ஜி எளிதாக எற்படும். எந்த பொருளையும் உங்களின் சருமத்திற்கு பாதிப்பு தராமல் இருக்குமா என்று பார்த்து உபயோகிப்பது நல்லது. முகத்தை முறையாகப் பராமரியுங்கள். சிறுநீர்த் தொற்று, பாலியல் தொடர்பாக சிறு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலும் கூட மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள். சிறு வயதில் எதிர்பாராத கண்டங்கள் ஏற்பட்டாலும் பூரண ஆயுளுடன் வாழ்வார்கள்.


பெருமாளை வணங்குங்கள்
தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இருக்கும். உங்களின் வேலை ஸ்தானத்தை பத்தாம் வீட்டிற்கு அதிபதியான கன்னி புதன்தான் நிர்ணயிக்கிறார். எனவே பெருமாளை வணங்குவது மிகவும் நல்லது. குறிப்பாக திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாளையும், தாயார் மகாலட்சுமியையும் வணங்குங்கள். இத்தலம் சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. கடன், நோய், எதிரி என்று எந்தப் பிரச்னை வந்தாலும் திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் அருளும் ஸ்ரீஹரி குரு சிவயோக தட்சிணாமூர்த்தியை தரிசியுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!