தந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்! தேனி அருகே பயங்கரம்..!


குடித்துவிட்டு கொடுமைப்படுத்திய தந்தையை அவருடைய மகனே கழுத்தை அறுத்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியைடந்த பொதுமக்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர், சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தண்ணீரில் ஊறியதில் முகம் சிதைந்து காணப்பட்டதால், இறந்தவர் யார்? என்று அடையாளம் காணமுடியவில்லை. இதனால் கொலையாளி யார் என்று துப்புதுலங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் பின்பு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில் இறந்தவர் அணிந்திருந்த வெள்ளை வேட்டியில் சலவைக்கூடத்தில் போடப்பட்ட குறியீடை வைத்து விசாரணையை தொடங்கினர். அந்த குறியீடை ஆண்டிப்பட்டியை சேர்ந்த சலவை தொழிலாளிகளிடம் காட்டி இறந்தவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

ஒரு சலவை தொழிலாளி கொடுத்த தகவலின்படி, இறந்தவர் ஆண்டிப்பட்டி மீனாட்சிசுந்தரநாடார் தெருவை சேர்ந்த முருகன் (வயது 42) என்றும், ஆண்டிப்பட்டி பஸ்நிலையம் அருகே பழக்கடை வைத்து இருந்ததும் தெரியவந்தது. அதன் மூலம் இறந்தவர் முருகன் என்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முருகனின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில் முருகனை கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுப்படுவதாவது:

முருகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் மது குடித்துவிட்டு, வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறில் ஈடுபடுவாராம். தனால் மனைவி மற்றும் குழந்தைகள் கடும் வேதனைக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 31-ந்தேதி இரவு 10 மணியளவில் முருகன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அம்மாவை அடித்து துன்புறுத்துவதை கண்ட மகன், மகள் மலர் ஆகியோர் தந்தையை விலக்கி விட்டு உள்ளனர். ஆனால் முருகன் தொடர்ந்து தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தனது தந்தை முருகனின் கழுத்தை அறுத்துள்ளான். இதற்கு முருகனின் மனைவி கலைச்செல்வி மற்றும் மகள் மலர் ஆகியோர் உதவியுள்ளனர். கழுத்து அறுபட்டதால் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்தார்.

இதன்பின்னர் முருகனின் உடலை மோட்டார் சைக்கிளில் ஏற்றி அவருடைய மகன், தனது நண்பன் உதவியுடன் டி.வாடிப்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் போட்டுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கழுத்தை அறுத்து தந்தையை கொலை செய்த அவருடைய மகன் ஆண்டிப்பட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!