ஒசாமா பின்லேடன் பற்றி முதன் முறையாக மனம் திறந்த தாய்…!


அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகும் ஒசாமா பின்லேடனின் குடும்பம் சவுதி அரேபியாவின் செல்வாக்கு பெற்ற குடும்பமாகவே உள்ளது. அத்துடன் தங்கள் ராஜ்யத்தின் வரலாற்றில் இருண்ட தருணத்தை நினைவூட்டுகிறது.

தி கார்டியன் பத்திரிகைக்கு பேட்டியளித்த ஒசாமா பின்லேடனின் தாயார் அலியா கனெம் , தனது மகன் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு அவன் காரணமல்ல என்றும் அவன் எப்படியோ வழி தவறி விட்டான் என்றும் கூறினார்.

பல ஆண்டுகளாக பயங்கர தீவிரவாதியாகக் கருதப்படும் ஒசாமா பின்லேடன் 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். தனது முதல் கணவருக்குப் பிறந்து இரண்டாவது கணவரால் வளர்க்கப்பட்ட தனது மகன், இளைஞனாக இருக்கும்போது ஒரு மதவாதக் குழுவால் மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டதாக அவர் தெரிவிக்கிறார்.


ஜித்தாவில் உள்ள கிங் அப்துலாசிஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்ற ஒசாமா பின்லேடன், பல்கலைக்கழகத்தில் சிலரால் மாற்றப்பட்டதாக தெரிவிக்கிறார் அவர். கூச்ச சுபாவமுள்ள ஒரு பையனாக இருந்த அவன் சில குறிப்பிட்ட மதவாதிகளைச் சந்தித்தபின் வேறு ஒரு மனிதனாக மாறிவிட்டான் என்று தனது மகனைக் குறித்து கூறும் கனெம், அவர்களிடமிருந்து விலகியிரு என்று அவனுக்கு சொல்லியும் அவன் என்ன செய்கிறான் என்பதை எனக்கு சொல்லவேயில்லை, காரணம் அவன் என்னை அவ்வளவு நேசித்தான் என்கிறார்.

தனது மகனைக் குறித்து தான் வெட்கப்படவில்லை என்று கூறும் அவர் , அவனது கூட்டாளிகள்தான் அவனை மாற்றி விட்டார்கள் என்கிறார்.

சவுதி அரேபியாவில் அவரது குடும்பம் ஒரு பெரிய செல்வந்தக் குடும்பம் என்பதால் தங்கள் கடந்த காலத்தை உதறிவிட்டு ஒரு புதிய வாழ்வை தொடங்க நினைத்தாலும் ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சாவும் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த காலத்திலிருந்து அவரது குடும்பத்தால் மீள முடியவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள உளவுத்துறை ஏஜென்சிகள் இன்னும் கண் கொத்திப் பாம்பாய் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!