இந்திய ராணுவத்தின் ‘டர்னடோஸ்’ குழு புதிய உலக சாதனை படைத்துள்ளனர்…!


பெங்களூருவில், ஒரே மோட்டார் சைக்கிளில் 58 ராணுவ வீரர்கள் பயணித்து உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பெறுகிறது.

பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் ஏ.எஸ்.சி. பயிற்சி மையத்தில் உள்ள ‘டர்னடோஸ்’ குழுவில் இருக்கும் ராணுவ வீரர்கள் 54 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று உலக சாதனை படைத்தனர்.

ராணுவத்தின் ‘ஆர்மி சிக்னல் கார்ப்ஸ்’ குழுவினர் 56 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று 2013-ம் ஆண்டு அந்த சாதனையை முறியடித்தனர். அவர்களின் சாதனையை முறியடிக்க ‘டர்னடோஸ்’ குழுவினர் முடிவு செய்தனர்.

கடந்த 6 மாதங்களாக அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள ராணுவத்துக்கு சொந்தமான விமான தளத்தில் உலக சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

500 சி.சி. கொண்ட பழமையான மோட்டார் சைக்கிளில் ‘டர்னடோஸ்’ குழுவை சேர்ந்த வீரர்கள் சாகச பயணத்தை தொடங்கினர். அப்போது வீரர்கள் தேசிய கொடியின் மூவர்ணங்களை குறிக்கும் விதமாக உடைகள் மற்றும் ஹெல்மெட்டுகள் அணிந்திருந்தனர்.


சாதனைக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்.
மோட்டார் சைக்கிளை ராணுவ வீரர் சுபீதார் ராம்பால் யாதவ் ஓட்டினார். தொடக்கத்தில் 30 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிக்க, அதை தொடர்ந்து ஓடும் மோட்டார் சைக்கிளில் தலா 2 வீரர்களாக அடுத்தடுத்து ஏறினர்.

இவ்வாறாக மொத்தம் 58 ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்தனர். அவர்கள், 1.20 கிலோ மீட்டர் தொலைவை 2 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார்கள். ‘டர்னடோஸ்’ குழுவின் இந்த சாதனை ‘கின்னஸ்’, ‘லிம்கா’, ‘யூனிக்யூ’ புத்தகங்களில் இடம் பெற உள்ளது.

இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் சிலரும் இடம் பெற்றிருந்தனர். இதுகுறித்து, மேஜர் பன்னி சர்மா கூறுகையில், ‘அடுத்தகட்டமாக 15 மோட்டார் சைக்கிள்களில் 300 வீரர்கள் கோபுரம் அமைத்து பயணம் செய்து சாதனை படைக்க திட்டமிட்டு இருக்கிறோம்’ என்றார்.

உலக சாதனைக்கான முதல் முயற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்ட போது திடீரென மோட்டார் சைக்கிள், ஓட்டுனர் சுபீதார் ராம்பால் யாதவின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், வீரர்கள் கீழே விழுந்தனர்.

இதேபோல் 2-வது முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. இருப்பினும் ராணுவ வீரர்கள் மனம் தளராமல் 3-வது முயற்சியை நம்பிக்கையுடன் மேற்கொண்டனர். அதில் வெற்றிக்கனியை சுவைத்து உலக சாதனையை நிகழ்த்தினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!