போர்ச்சுகலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உருகுவே அணி வெற்றி..!


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உருகுவே அணி வெற்றிபெற்றது.

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள், ஜூன் 28ம் தேதியுடன் முடிவடைந்தன. இந்த சுற்றின் முடிவில் நாக்-அவுட் சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெற்றன.

இந்நிலையில், 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கின. இதில் மாலை 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டீனா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

அடுத்ததாக, இரவு 11.30 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான உருகுவே அணி, ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகலை எதிர்த்து களமிறங்கியது.

இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது. இன்னொரு ஆட்டம் டிரா ஆனது. ஆனால் உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் இடையிலான போட்டியானது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் ஆட்டம் பரபரப்பாக தொடங்கியது. இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். இதில் உருகுவே அணியின் சார்பில் நட்சத்திர வீரர் எடின்சன் கவானி தனது முதல் கோலை பதிவு செய்து அசத்தினார். கிறிஸ்டியானா ரொனால் டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியினரின் கோல் போடும் முயற்சி பலன் அளிக்காமல் போனது. இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி முன்னிலை பெற்றிருந்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில் போர்ச்சுகல் அணியின் சார்பில் பெபெ 1 கோல் அடித்து ஆட்டத்தினை சமன் செய்தார். அவரைத் தொடர்ந்து உருகுவே வீரர் எடின்சன் கவானி மீண்டும் 1 கோல் அடித்து அசத்தினார். இதனால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மீண்டும் கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைக்க போர்ச்சுகல் அணியினர் போராடினர். உருகுவே அணியினரின் சிறப்பான ஆட்டத்தால் கடைசிவரை அது முடியாமல் போனது. இதன்மூலம் போர்ச்சுகல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உருகுவே அணி வெற்றிபெற்றது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!