மகனால் வயதான பெற்றோர் வி‌ஷம் குடித்து தற்கொலை… அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில்…!


பெரியபாளையம் அருகே மகனை கவனிக்க முடியாத வேதனையில் வயதான பெற்றோர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரியபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் கண்டிகையை சேர்ந்தவர் கிருஷ்ணப்ப ரெட்டியார் (வயது 85). இவரது மனைவி கோவிந்தம்மாள் (80). இவர்களது மகன் செல்வராஜ். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.

செல்வராஜ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நோயின் தாக்கம் அதிகம் ஆனதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது 2 கால்களும் துண்டிக்கப்பட்டது. இதனால் செல்வராஜ் வீட்டில் படுக்கையிலேயே இருந்தார்.

அவரை மனைவி சாந்தி சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மனவேதனை அடைந்த கிருஷ்ணப்ப ரெட்டியாரும், கோவிந்தம்மாளும் வயதான காலத்தில் மகனை கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணப்ப ரெட்டியாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கால்களை இழந்த மகன் செல்வராஜை அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை.

மேலும் கோவிந்தம்மாளும் கணவர் மற்றும் மகனை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டார். இதன் காரணமாக விரக்தி அடைந்த கிருஷ்ணப்ப ரெட்டியாரும் கோவிந்தம்மாளும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

நேற்று மாலை அவர்கள் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணப்ப ரெட்டியாரும், கோவிந்தம்மாளும் பரிதாபமாக இறந்தனர். மகனை கவனிக்க முடியாத வேதனையில் வயதான பெற்றோர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோரை இழந்த செல்வராஜ் தவித்து வருகிறார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!