கன்னியாகுமரி அருகே 15 வயது சிறுமிக்கு தாலி கட்டி கர்ப்பமாக்கிய இளைஞர்..!


கன்னியாகுமரியில் 15 வயது சிறுமிக்கு தாலிகட்டி திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய இளைஞர் மீது வழக்குப்பதிந்தனர் காவலாளர்கள் .

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (21), கூலி தொழிலாளியான இவர் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு பகுதியில் வேலைக்குச் சென்றார்.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் காதலாக மாறியது. ஆனால், இந்த காதலுக்கு சிறுமியின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜேஷ் அந்த சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டார். இருவரும் இல்லற வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இதில், அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்.

இதனையடுத்து பரிசோதனை செய்ய ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

பின்னர் அந்தப் பெண்ணிடம் வயதை கேட்டபோது, அவருக்கு 15 வயதுதான் ஆகிறது என்பதை தெரிந்து கொண்டனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவலாளர்கள் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, “ராஜேஷ் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் தான் கர்ப்பமானேன்” என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்துகொண்டு அவரை கர்ப்பமாக்கிய ராஜேஷ் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக ராஜேஷின் உறவினர்கள் அபிஷா, சரோஜா, சுதன் ஆகியோர் மீதும் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர்.

இதனை எப்படியோ அறிந்துகொண்ட ராஜேஷும், அவரது உறவினர்களும் தலைமறைவானார்கள். அவர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!