டிரம்ப் விடுத்த அழைப்பை ஏற்று கிம் ஜாங் அன் அமெரிக்கா செல்ல திட்டம்..!


அமெரிக்கா வருமாறு டிரம்ப் விடுத்த அழைப்பை கிம் ஜாங் அன் ஏற்றுக்கொண்டுள்ளதாக வடகொரிய அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – வடகொரியா இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா உள்பட பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், கிம் ஜாங் அன்னை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல் டிரம்பை வடகொரியாவுக்கு வருமாறு கிம் அழைத்தார். இந்நிலையில், டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல கிம் ஜாங் அன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அணு ஆயுதத்தை முற்றிலும் கைவிடுவது என்பதானது, இரு தரப்புக்கும் இடையே, முரண்பாடுகள் குறைவது மற்றும் இருதரப்பு புரிதலைச்சார்ந்தது எனவும் கிம் கூறியதாக வடகொரியா அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!