பலத்த காற்றில் தொட்டிலில் கிடந்த இரண்டு மாத குழந்தையுடன் மேல்கூரை பறந்தது. அந்த தொட்டில் தென்னை மரத்தில் சிக்கி மேல்கூரையுடன் தொங்கியதால் குழந்தை காயத்துடன் உயிர் தப்பியது.
தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கேரளாவில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அதுவும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட முன்னதாகவே பருவமழை தொடங்கியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள வெங்ஙானூர் பள்ளி மைதானம் அருகில் வாடகை வீட்டில் குமார்-ஷீபா தம்பதியினர் 3 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
நேற்று தகடு வேய்ந்த மேல்கூரையில் இவர்களது 2 மாத கைக்குழந்தை விநாயகனை தொட்டில் கட்டி படுக்க வைத்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலமான காற்று வீசியது. அதில் தொட்டிலுடன் மேல்கூரை பறந்தது.
குழந்தையுடன் பறந்த அந்தத் தொட்டில் வீட்டின் அருகில் இருந்த தென்னை மரத்தில் தட்டி தொங்கியது. குழந்தை அழுவதையும் வீட்டில் இருந்து பெற்றோரின் அலறலையும் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் உடனடியாக ஏணி வைத்து ஏறி குழந்தையை மீட்டனர். காயமடைந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.-
Source: tamil.asianetnews
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!