சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.
“இவ்வாறு சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற 62 சீன அரசு நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் தமது பிராந்திய தலைமையகங்களை சிறிலங்காவிலேயே அமைத்துள்ளனர்.
இதனால் தான்,தெற்காசியாவில் எமது தலைமையகங்களில் ஒன்றாக சிறிலங்காவை தெரிவு செய்தோம். இந்த கிளை மாலைதீவு, பங்களாதேஸ், நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள எமது கிளைகளின் வணிக நடவடிக்கைகளைக் கவனிக்கும்.
மூலோபாய அமைவிடம், பொருளாதார முன்னேற்றம், மற்றும் ஏனைய கவரும் தன்மைகளால், எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் இடமாக சிறிலங்கா மாறும்.
கொழும்பில் எமது கிளையை திறக்கும், பிராந்திய தலைமையகத்தை அமைக்கும் முடிவில் அதுவும் செல்வாக்கு செலுத்தியது.” என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சீனத் தூதரக, பொருளாதார விவகாரங்களுக்காக பணியகத்தின் அதிகாரியான, யா சூ யுவான், அண்மைய ஆண்டுகளில் சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு சீன நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவின் மிக முக்கியமான வெளிநாட்டு நேரடி முதலீட்டு வளமாக சீனா மாறியுள்ளது.
சீனாவுக்கான ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை கவருதல் முக்கியமானது.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து 270,000 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்தனர். இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான பங்களிப்பாகும்.
கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்தளவு வீதத்தில் வளர்ந்து வருகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் அண்மையில் முறைப்படி ஆரம்பிக்கப்பட்ட- சீன வங்கி, வரும் ஜூலை மாதம், கொழும்பில் தனது கிளையை திறக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.source-puthinappalakai
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!