திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு – காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை..!


விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வரதப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் பூஜா(வயது 16). பெரியசிறுவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த அவர், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

ஏழுமலை தனது மனைவியுடன் கர்நாடக மாநிலம் மங்களூருவில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். இதனால் பூஜா தனது வீட்டில் பாட்டியுடன் தங்கி படித்து வந்தார். அப்போது பூஜாவுக்கும், அதே ஊரை சேர்ந்த மாயக்கிருஷ்ணன் மகன் விக்னேஷ்(21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கடந்த ஓராண்டாக ஒருவரையொருவர் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர். இதையறிந்த பூஜாவின் பெற்றோர் தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் விக்னேசை கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்த ஏழுமலையிடம், பூஜாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு விக்னேஷ் கூறியுள்ளார். இதற்கு ஏழுமலை மற்றும் அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் விக்னேசிடம், பூஜாவுக்கு தற்போது 16 வயது தான் ஆகிறது என்றும், 18 வயது பூர்த்தியடைந்தவுடன் திருமணம் செய்து வைக்கிறோம் என்றும், அதுவரை பொறுமையாக இருக்குமாறும் அறிவுரை கூறியுள்ளனர்.

இதையடுத்து பூஜாவின் பெற்றோர் மீண்டும் வேலைக்காக மங்களூருக்கு புறப்பட்டு சென்றனர். காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லையே என மனமுடைந்த விக்னேஷ், பூஜாவை சந்தித்து, உனது பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதனால் காதல் ஜோடி வாழ்க்கையில் தான் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஒன்று சேருவோம் என முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் விக்னேசும், பூஜாவும் அவர்களது வீடுகளை விட்டு வெளியேறி வரதப்பனூர்-உலகியநல்லூர் சாலையோரத்துக்கு வந்தனர். பின்னர் இருவரும் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை (பூச்சி மருந்து) குடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டி அனைத்தபடி கீழே மயங்கி விழுந்து இறந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் காதல் ஜோடியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சின்ன சேலம் போலீசாருக்கும், காதல் ஜோடியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி உடல்களை பார்வையிட்டு, அருகில் கிடந்த செல்போன், பூச்சி மருந்து பாட்டில் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனிடையே காதல் ஜோடியின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ், பூஜா ஆகியோரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!