வீட்டு வேலை செய்ததற்கான சம்பளம் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!


டெல்லியில் வீட்டு வேலை செய்து வந்த ஜார்க்கண்ட் மாநில சிறுமியை, சம்பளப் பணத்திற்காக வேலை வாங்கிக் கொடுத்த நபரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனி குமாரி என்ற 16 வயது சிறுமியை மன்ஜீத் கர்கெட்டா என்பவர் டெல்லியில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து உள்ளார். பின்னர் டெல்லியில் ஒரு தொழிலதிபரின் வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.

ஆனால் சம்பளத்தை அந்த சிறுமியிடம் இருந்து மாதா மாதம் மன்ஜீத் பறித்துள்ளார். இது தான் வாடிக்கையாக இருந்து உள்ளது. ஓராண்டு கடந்த நிலையில் சிறுமி அந்த வேலையை விட்டுவிட்டார். பின்னர் கடந்த 3-ம் தேதி கர்கெட்டாவிடம் சென்று தனது சம்பள பணத்தை கேட்டுள்ளார். ஆனால், மறுநாள் அப்பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் சிறுமி பிணமாக கிடந்து உள்ளார். அவரது உடல் 12 துண்டாக வெட்டப்பட்டு இருந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுமி கொலையான நாளில் இருந்து மன்ஜித் தலைமறைவானது தெரியவந்தது. ஜார்க்கண்டில் உள்ள அவரது வீட்டிலும் இல்லை.

பின்னர் கடந்த 17-ம் தேதி அவர் வாடகை கொடுப்பதற்காக டெல்லியில் உள்ள வீட்டிற்கு வரும்போது போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், மே 3-ம்தேதியே சிறுமியை மன்ஜித் கொன்றது தெரியவந்தது. அவருக்கு உடந்தையாக 2 பேர் செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மன்ஜீத்தை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!