தகாத வார்த்தைகளால் மாமியார் திட்டியதால் போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு..!


காஞ்சிபுரத்தில் மாமியார் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த காவலர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், சின்னக்கடை, மகிமைதாஸ் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). இவர் சின்ன காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்துகொண்டு, காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளருக்கு ஓட்டுநராகவும் இருந்து வந்தார்.

இவர் கடந்தாண்டு குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பிரியா (28) என்பவரை திருமணம் செய்தார். கடந்த வாரம் பிரியாவுக்கு வளைகாப்பு நடந்தது.

இந்த நிலையில் சதீஷ்குமாருக்கும், அவரது மாமியாருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்ததால், மாமியார் சதீஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டினராம். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் விடுப்பு எடுத்துக்கொண்டு, தனது காரில் வாலாஜாபாத்தை அடுத்த நத்தப்பேட்டை இரயில் நிலையம் அருகே வள்ளுவப்பாக்கம் என்ற இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு தனது காரை நிறுத்திவிட்டு காஞ்சிபுரம் நோக்கி சென்ற இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.


அதன்பேரில் காவல் ஆய்வாளர் மணிமாறன், சின்ன காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தது காவலர் சதீஷ்குமார் என்பதை உறுதிபடுத்தினர்.

இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு இரயில்வே காவலாளர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, காஞ்சிபுரம் நகர துணை காவல் கண்காணிப்பாளர் முகிலன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

காவலர் சதீஷ்குமாரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டபோது மனைவியுடன் சதீஷ்குமார் இருக்கும் புகைப்படத்துடன் பர்ஸ் ஒன்றும், அவரது செல்போனும் கிடந்தது.

மேலும், அவரது சட்டை பையில் கடிதம் ஒன்று இருந்ததாகவும் அந்த கடிதத்தில், “தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் எந்த தகராறும் இல்லை. மனைவியின் குடும்பத்தினர் தகராறு செய்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று எழுதியிருந்தாக காவலார்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி செங்கல்பட்டு இரயில்வே காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!