காவிரி உரிமைக்கு குரல் கொடுக்க சென்னையில் ஒன்று திரண்ட நடிகர்-நடிகைகள்..!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயங்கும் மத்திய அரசுக்கு, தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மாணவர்களும் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், ரெயில் மறியல் என்று தொடர் போராட்டங் களை நடத்தி வருகிறார்கள். ஆளும் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், நடிகர்-நடிகைகளும் நேற்று போராட்ட களத்தில் குதித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் சென்னையில் நேற்று அறவழி கண்டன போராட்டம் நடத்தினார்கள். சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது.

இதற்காக அங்கு நடிகர்- நடிகைகள் அமர மேடையும், திரைப்பட தொழிலாளர்களுக்காக சாமியானா பந்தலும் அமைக்கப்பட்டு இருந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர். பிரபு, ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் அதிகாலையிலேயே வந்தனர்.

திரைப்பட தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள், “மத்திய அரசே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு”, “தமிழர்கள் உணர்வை மதித்திடு” என்று கோஷமிட்டபடி இருந்தனர்.

நடிகர் கமல்ஹாசன் காலை 11 மணிக்கு கருப்பு சட்டை- பேண்ட் அணிந்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் காலை 11.30 மணிக்கு வந்தார். இருவரும் அருகருகே உட்கார்ந்து இருந்தனர்.


நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம், சிவகுமார், சத்யராஜ், தனுஷ், ஜெயம் ரவி, பார்த்திபன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, பிரசாந்த், சிபிராஜ், விவேக் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் மேலும் கலந்து கொண்டவர்கள் விவரம் வருமாறு:-

நடிகர்கள் விஜய் ஆண்டனி, ரமேஷ்கண்ணா, பசுபதி, ஐசரி கணேஷ், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அருண்விஜய், வையாபுரி, தம்பிராமையா, மன்சூர் அலிகான், சாந்தனு, உதயா, மயில்சாமி, அஜய்ரத்னம், ஆர்.கே.சுரேஷ், அப்புக்குட்டி, சக்தி, நடிகைகள் லதா, ரேகா, கஸ்தூரி, ஸ்ரீபிரியா, பூர்ணிமா, அம்பிகா, சச்சு, குட்டி பத்மினி, ரோகிணி, லலிதா குமாரி, லட்சுமி ராமகிருஷ்ணன், சி.ஆர்.சரஸ்வதி, ஆர்த்தி.

டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திர சேகர், ஷங்கர், தங்கர் பச்சான், டி.பி.கஜேந்திரன், ஆர்.வி.உதயகுமார், மோகன்ராஜா, கவுதமன், வி.சேகர், ஏ.வெங்கடேஷ், ஹரி, திருமலை, ராஜா, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஸ்ரீகாந்த் தேவா, ஜேம்ஸ் வசந்தன், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கே.ஆர்., ஏ.எல்.அழகப்பன், ஞானவேல்ராஜா, மகிழ் திருமேனி.

கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர் மதன் கார்க்கி, எடிட்டர் மோகன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீராம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டு மவுனமாக இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

முன்னதாக போராட்டத்தை தொடங்கி வைத்து நாசர் பேசுகையில் கூறியதாவது:-

காவிரி பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் ஓரே உணர்வில் போராடி வருகிறார்கள். கலைஞர்களும், கலையும் மக்களுக்காக என்பதை உணர்த்த கடந்த காலங்களில் இருந்து இன்று வரை திரையுலகினரும் மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்கள். போர் முனைக்கும் சென்று இருக்கிறார்கள்.

காவிரி உரிமைக்காக போராடுவதும் திரையுலகினரின் கடமை. இந்த நிகழ்வை இதை விட பெரிய அளவில் நடத்த திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் கேட்ட இடம் கிடைக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

காவிரி ஆண்டாண்டு காலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதற்கு எந்த எல்லையும் கிடையாது. அது இயற்கை கொடுத்த வரம். அரசியலில் எல்லைகள் பிரிக்கப்பட்டதால் காவிரி பிரச்சினையை அரசியலாக்கிவிட்டார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் நமது உரிமை. மத்திய அரசு அதற்கு உடனடியாக செவி சாய்க்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அந்த ஆலை தேவை இல்லை. காவிரி பிரச்சினையை திசைதிருப்பாமல் இருப்பதற்காக திரையுலகினரின் மவுன போராட்டமாக இது நடைபெறும்.

இவ்வாறு நாசர் பேசினார்.

நடிகர் விஷால் பேசும்போது, “காவிரி, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகளுக்காக கவர்னரிடம் அளிக்க 2 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனு தயார் செய்யப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்” என்றார்.

போராட்டத்தில் இறுதியில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகர்-நடிகைகள் போராட்டத்தால் வள்ளுவர் கோட்டம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பந்தலுக்கு உள்ளேயும், வெளியேயும் கூட்டத்தினர் திரண்டு இருந்தனர். பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தடுப்பு வேலிகள் அமைத்து கூட்டத்தை அவர்கள் கட்டுப்படுத்தினார்கள். தனி வழி அமைத்து நடிகர்-நடிகைகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

நடிகர்-நடிகைகள் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!