இப்படியும் ஒரு மகனா..? ‘மம்மி’ பாணியில் இறந்த தாயின் உடலுடன் வாழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!


உயிரிழந்த தாயின் உடலை வெட்டி துண்டு துண்டாக்கி அதை குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக அவரது மகன் பத்திரப்படுத்தி வைத்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் கோபால் சந்திர மஜும்தார். இவரது மனைவி பினா மஜும்தார். இந்திய உணவுக் கழகத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் வழக்கறிஞரும் கூட. பினாவும், இந்திய உணவுக் கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர்களது மகன் சுபப்பிரதா மஜும்தார் (46).

தாய், தந்தை இருவரும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பினா மஜும்தார், 2015-ம் ஆண்டு மருத்துவமனையில் இறந்துள்ளார். ஆனால் உடல் வீட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், கோபால் சந்திர மஜும்தாருக்கும் அவ்வளவாக நெருக்கம் இல்லாததால் யாரும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


இதனிடையே சந்திர மஜும்தார் வீட்டுக்கு மிகப்பெரிய குளிர்சாதனப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. அவரது வீட்டின் கீழ்தளம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாகவே சடலத்துடன் சந்திர மஜும்தாரும், சுபப்பிரதா மஜும்தாரும் இருந்து வந்துள்ளனர்.

சுபப்பிரதாவின் நடவடிக்கையில் சந்திர மஜும்தாரின் உறவினர்களில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா போலீஸார், சுபப்பிரதா வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் பினாவின் உடல் துண்டு துண்டாக வெட்டி பதப்படுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் சுபப்பிரதாவைக் கைது செய்தனர். உடல்நலக் குறைவால் சந்திர மஜும்தாரை கைது செய்யாமல் விசாரணை நடத்தி வருகின்றனர். தொலைக்காட்சி யில் செய்திப்படம் பார்த்து இதுபோன்று தான் செய்ததாக சுபப்பிரதா கூறியுள்ளார். மேலும் தாய் மீண்டும் உயிர்பெற்று வருவார் என்ற நம்பிக்கையில் உடலைப் பாதுகாத்து வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.-Source: tamil.thehindu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!