மது போதையில் தரையில் உருண்டு படுத்திருந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்டு..!


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்தது பூவந்தி ஊராட்சி. இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக ரஜினிகாந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் 1மணியளவில் பள்ளி நேரத்தில் வெளியே சென்று விட்டு மது அருந்து விட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.

இதையடுத்து அந்த பள்ளியில் உள்ள ஓய்வறையில் ரஜினிகாந்த் மது போதையில் கீழே படுத்தார். இதையடுத்து அந்த பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள் இது குறித்து அந்த கிராம மக்கள் மற்றும் பிற ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி(பொறுப்பு) ஷகிதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) சூரன் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் குடிபோதையில் தரையில் படுத்திருந்த உடற்கல்வி ஆசிரியர் ரஜினிகாந்த் மீது தண்ணீர் ஊற்றி போதையை தெளிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் 3மணி நேரம் கழித்தும் அவருக்கு போதை தெளியவில்லை. இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளை மற்ற ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் வீட்டிற்கு அனுப்பினர்.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஷகிதா கூறியதாவது:-

மாணவ-மாணவிகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய உடற்கல்வி ஆசிரியர் பொறுப்பில்லாமல் மது அருந்து விட்டு வந்தது கடும் கண்டனத்திற்கு உரியது. இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதனையடுத்து மது போதையில் பணியில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!