கும்ப ராசிக்காரர்களே… துணிச்சலாக எதையும் செய்து முடிப்பீர்கள்.! விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்..!


விளம்பி வருடம் கும்ப ராசி நேயர்களான உங்களுக்கு, 2-வது ராசியில் பிறப்பதால், இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு யோகம் அதிகமாகவே இருக்கும்.

அக்டோபர் 3-ம் தேதி வரை குரு 9-ம் வீட்டில் இருப்பதால், நீங்கள் தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும். நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். பழைய வழக்குகள், சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.

உங்கள் கும்ப ராசிக்கு இரண்டாவது வீட்டிலேயே சந்திரனும் புதனும் இருப்பதால், எதிலும் சாதுர்யமாகப் பேசி, காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டுக்கு வருகிறார். அப்போது சின்னச் சின்ன தொந்தரவுகள், சச்சரவுகள் ஏற்படும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திடவோ அல்லது ஜாமீன் கொடுக்கவோ வேண்டாம்.

இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிநாதன் சனி பகவான், ராசிக்கு 11-ம் வீட்டில் இருப்பதால் பெரிய பெரிய சவாலான காரியங்களை எல்லாம் சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவது, புது வீடு வாங்குவது, புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வது போன்றவயெல்லாம் இந்த ஆண்டில் நடக்கும். பிள்ளைகளுக்குச் சிறப்பான முறையில் திருமணம் செய்துவைப்பீர்கள்.

பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வரை ராகு, கேது இருவருமே உங்களுக்கு மிகவும் அனுசரணையாக இருப்பார்கள். ராகு பகவான் 6-ம் வீட்டில் நிற்பதால், திடீர் ராஜயோகம் உங்களுக்கு உண்டு. ராகுவின் பலமிருப்பதால் இந்த ஆண்டு துணிச்சலாக எதையும் செய்து முடிப்பீர்கள்.

மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில், செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்கிறார். சகோதரர்கள் வகையில் வீண் அலைச்சல் ஏற்படும். தூக்கம் கெடும். உடல்நலனில் கவனம் செலுத்தவும். சொத்து தொடர்பான வழக்குகளில் ஒன்றை விட்டுக் கொடுத்து, ஒன்றைப் பெறவேண்டியிருக்கும்.


கும்ப ராசி நேயர்களுக்குப் பிரபல யோகாதிபதி சுக்கிரன் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு யோகஸ்தானத்திலேயே இருக்கப் போகிறார். அந்தக் காலகட்டத்தில் திடீர் பணவரவு, பெரிய பதவிகள், பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த கணவன், மனைவி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு மறுபடியும் ஒன்று சேருவார்கள்.

மாணவ, மாணவிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால், மாநில அளவில்கூட முதல் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பிருக்கிறது. நிச்சயம் முதல் ஐந்து இடங்களுக்குள் வரும் வாய்ப்பு அதிகம். பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லவிதமாக இந்த ஆண்டு நிறைவேறும்.

வியாபாரத்தைப் பொறுத்தவரை, குரு பகவான் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். பழைய சரக்குகளையெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள்.

புதிய பங்குதாரர்கள், பணியாளர்களை உங்களுடன் இணைத்துக்கொள்வீர்கள். வாடகை இடத்தில் இதுவரை கடை வைத்திருந்தவர்கள் சொந்தக் கட்டடத்தில் வியாபாரத்தை நடத்தும் வாய்ப்பு வரும். ஏற்றுமதி – இறக்குமதி, துணிகள், உணவுப் பொருள்கள் இவற்றின் மூலமாக நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அக்டோபர் மாதம் வரை குருபகவான் 9-ம் வீட்டில் இருப்பது மிகவும் சாதகமான நிலை. தந்தை வழியில் நல்ல செய்திகள் வரும். தகப்பனார் வழி சொத்துகளை பாகப்பிரிவினை செய்வது சுமுகமாக முடியும்.

அக்டோபருக்குப் பிறகு, குரு 10-ம் வீட்டில் பிரவேசிப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றமும் வரக்கூடும். மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

கலைத்துறையினருக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமாக இருக்கும். புதிய பட வாய்ப்புகள், மூத்தக் கலைஞர்களின் அறிமுகம் இவையெல்லாம் கிடைக்கும். சின்னதிரைக் கலைஞர்களாக இருந்தாலும் சரி, பெரியதிரைக் கலைஞர்களாக இருந்தாலும் சரி பெரிய அளவில் சொத்துகள் வாங்கும் யோகம் அமையும்.

விவசாயிகள் தாங்கள் வாங்க வேண்டும் என நினைத்திருந்த பக்கத்து வயலையும் சேர்த்து விலைக்கு வாங்குவீர்கள். கிணற்றில் தண்ணீர் இல்லையே எனக் கவலைப்பட வேண்டாம். நீர்வளம் நன்றாக அமையும். மகசூலும் அருமையாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், உங்களுக்கு முன்னேற்றத்தைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்

தர்மபுரியில், ‘கோட்டைக்கோயில்’ என்று அழைக்கப்படும் கோயிலில் அருளும் ஸ்ரீகாமாட்சி அம்மனையும், ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரரையும் பிரதோஷ நாளில் வில்வ அர்ச்சனை செய்து, வழிபட்டு வாருங்கள். செல்வ வளம் பெருகும்.-Source: Vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!