மிதுன ராசிக்காரர்களே! எல்லா யோகங்களையும் தரப் போகிறார் – விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!


விளம்பி வருட புத்தாண்டுப் பலன்கள்! மிதுனம். மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான நேரத்தில் இந்த விளம்பி வருடம் பிறக்கிறது. அவர்களுக்குப் பல யோகங்களைத் தரும் விதமாக இந்தப் புத்தாண்டு பிறக்கிறது.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் வலுத்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், மிதுனராசிக்காரர்களுக்கு எல்லா யோகங்களையும் தர இருக்கிறார். அக்டோபர் மாதம் 3-ம் தேதி வரை மிதுனராசிக்கு 5- ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பார். இதனால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

‘நீண்ட நாள்களாக மகளுக்கு நல்ல வரன் அமையவில்லையே’ என்ற ஏக்கம் மாறி, நல்ல இடத்தில் வரன் அமைந்து, திருமணமும் சிறப்பாக நடைபெறும். மகனுக்கும் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைப்பதுடன், திருமணமும் கூடி வரும்.
அக்டோபர் 4 -ம் தேதியிலிருந்து குரு பகவான் 6-ம் வீட்டில் மறைகிறார். அப்போது முதல் கொஞ்சம் அலைச்சல் திரிச்சல் இருக்கவே செய்யும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

ஏழாம் வீட்டில் சனி பகவான் செவ்வாயுடன் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், கணவன் – மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். கூடுமானவரை விவாதங்களில் ஈடுபடாமல், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 7-ம் வீட்டில் இருக்கும் சனியை கண்டகச் சனி என்பார்கள். வாழ்க்கை துணையின் உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும்.

விளம்பி வருட ராசிபலன்


பூர்வ புண்ணியாதிபதியான சுக்கிரன், பூர்வ புண்ணியஸ்தானமான 5 -ம் வீட்டிலேயே ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரைக்கும் இருப்பதால், குடும்பத்தில் குதூகலத்துக்குக் குறைவிருக்காது. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்யும் வாய்ப்பும் பலருக்குக் கிடைக்கும்.

மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை செவ்வாய் ராசிக்கு 9-ம் வீட்டில் இருக்கப்போகிறார். சகோதரர் வகையில் சொத்துகளைப் பிரித்துக்கொள்ளும்போது சுமுகமாகப் பிரித்துக்கொள்ளுங்கள். வீண் மனஸ்தாபங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
அக்டோபருக்குப் பிறகு கிரகங்களின் போக்கில் மாறுதல்கள் இருப்பதால், நிதானமான போக்கைக் கடைப்பிடியுங்கள்.

பிப்ரவரி மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற இருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
வியாபரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் இந்த வருடத்தில் சரி வராது. பலமுறை யோசித்துப் பார்த்து புதிய முதலீடுகளைச் செய்வது நல்லது. அவசரப்பட்டு அகலக்கால் வைக்க வேண்டாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்ல விதமாக இருக்கும். அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அதே நேரத்தில் அக்டோபருக்குப் பிறகு வேலையில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவ மாணவியர், படிப்பில் இந்த ஆண்டு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். கணக்குப் பாடமாக இருந்தாலும், அறிவியல் பாடமாக இருந்தாலும் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை எழுதிப் பார்ப்பது நல்லது.

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகசூல் நல்ல விதமாக இருக்கும். வேலையாள்களை அவர்கள் போக்கில் விட்டுப்பிடித்து வேலை வாங்குவது நல்லது.


கலைஞர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். சுக்கிரன் சுபஸ்தானத்தில் இருப்பதால், பட வாய்ப்புகள் தேடி வரும். பாதியில் தடைப்பட்டு நின்று போன தொலைக்காட்சித் தொடர்கள் மீண்டும் வேகமெடுக்கும்.

மொத்தத்தில், இந்த விளம்பி ஆண்டு மிதுனராசிக்காரர்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். இருந்தாலும் சில பல சவால்களும் தடைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். பொறுமையுடன் அவற்றைத் தாண்டி வெற்றியும் பெறுவீர்கள்.

பரிகாரம்
கடலூர் மாவட்டம், நல்லாத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாளை, சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

தொகுப்பு: எஸ்.கதிரேசன்.-Source: Vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!