கருப்பு துண்டை காவி துண்டு வெற்றி கொள்ளும் காலம் விரைவில் வரும் – தமிழிசை அதிரடி..!


சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் எங்களிடம் தான் உள்ளார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

வேலூரை அடுத்த காட்பாடியில் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை கலந்துக்கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் ரத யாத்திரையை தடுக்கிறார்கள். இது பெரியார் மண் என ஸ்டாலின் கூறுகிறார். அவருக்கு கூறிக்கொள்கிறேன் இது பெரியார் மண்ணல்ல; பெரியாழ்வார் மண். அண்ணா வளர்த்த தமிழ் அல்ல; ஆண்டாள் வளர்த்த தமிழ்.

ராகுல் காங்கிரஸ் தலைவராக இருக்கும் வரை, இந்தியாவில் பாஜகவின் வெற்றியை தடுக்க முடியாது. தமிழகத்தில் திமுக, காங்கிரஸூடன் வைகோ இருக்கும் வரை எங்களுக்கு கவலையில்லை.

கருப்பு துண்டை, காவி துண்டு வெற்றி கொள்ளும் காலம் வெகு விரைவில் வரும். காவி நிறம் தமிழ்நாட்டில் வந்துவிடுமோ என பயப்படுகிறார்கள். நிச்சயம் நிலைநட்டுவோம்.

சிலபேர் வெற்றிடத்தை நிரப்புகிறேன் என, நான்தான் சூப்பர் ஸ்டார், நான்தான் உலக நாயகன் என்று வருகிறார்கள். எங்களை பொறுத்தவரை சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் எங்களிடம் உள்ளார்கள். இனி நாங்கள் ஏன் கவலை படவேண்டும்.

இன்றைக்கு இந்தியாவின் பிரதமராக மோடி தான் வரவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ளவர்கள் கூட சொல்கிறார்கள். அவர் தான் சூப்பர் ஸ்டார்.

உலகத்தியேலே 10 கோடி தொண்டர்களை கொண்ட மிகப்பெரிய கட்சி பாஜக. அதை நிகழ்த்தியவர் அமித்ஷா. அவர் தான் உலக நாயகன் என்றார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!