தமிழக மக்கள் ஏமாற்று அரசியலை ஏற்க மாட்டார்கள் – தமிழிசை அதிரடி..!


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பா.ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ராசிபுரத்திற்கு வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தொண்டர்களை ஊக்கப்படுத்தவும், அந்தந்த பகுதி பிரச்சினைகளை தெரிந்துகொள்வதற்கும், உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சிறப்பாக சந்திப்பதற்கும் இந்த தொடர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். சுற்றுப்பயணம் முடிவடைந்த பின்னர் மக்கள் பிரச்சினைகளை முதல்-அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்ல உள்ளேன். தென் மாவட்டங்களில் மழை வந்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் சரியான தடுப்பு நடவடிக்கைகள் இல்லை.

கடலுக்கு சென்ற மீனவர்கள் திரும்பவில்லை. விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது என்ற செய்திகள் மன வருத்தத்தை தருகிறது. எப்படி மீன் பிடி தடை காலங்களில் நிவாரணம் வழங்கப்படுகிறதோ, அதே போல் மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணமும், விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பீட்டோடு சேர்ந்த நிவாரணமும் தமிழக அரசு வழங்க வேண்டும். நாளையதினம் (இன்று) ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது. அதுவும் தற்காலிக கட்சி என்று சொல்கிறார்கள்.

ஒரு நடிகர் புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார். அவர் கட்சி ஆரம்பித்துவிட்டு இணையதளத்தில் உறுப்பினர்களை சேர்ப்பதாக சொல்லி யார் யாரையோ சேர்த்துக்கொண்டு இருக்கிறார். யாருடைய மின்னஞ்சல் விவரங்கள் கிடைக்கிறதோ? அவர்களுக்கு எல்லாம் நீங்கள் எங்கள் கட்சியில் சேர்க்கப்பட்டு உள்ளர்கள் என மின்னஞ்சல் வருகிறது.

இது மிக தவறான நடவடிக்கை. விண்ணப்பம் வந்ததாக சொல்வது தவறு. நடிகரின் இப்படிப்பட்ட ஏமாற்று அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் திரைப்பட துறை இன்று முடங்கி கிடக்கிறது. எந்த துறை அவர்களை இத்தனை ஆண்டுகளாக காப்பாற்றியதோ அந்த துறையில் உள்ள பிரச்சினைகளை இவர்கள் எல்லாம் தீர்க்கட்டும். அரசியலை பார்த்துக்கொள்ள நிறைய பேர் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!