கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற மகனுக்கு தாயாரால் நடந்த கொடூரம்..!


சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள என்.எஸ்.கே. தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். தறி தொழிலாளி. இவரது மனைவி மைனாவதி என்ற தைலம்மாள். இவர்களது மூத்த மகன் சசிகுமார் (வயது 7).

கடந்த 5-ந்தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சசிகுமார் திடீரென மாயமானான். அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது மைனாவதி முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

தறி தொழிலாளியான மணிகண்டனும், அதே பகுதியை சேர்ந்த தியாகராஜனும் (வயது 28), நண்பர்கள். இதனால் மணிகண்டன் வீட்டிற்கு தறி தொழிலாளியான தியாகராஜன் (வயது 28) அடிக்கடி வந்து சென்றார்.

அப்போது மைனாவதிக்கும், தியாகராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மணிகண்டன் வெளியில் சென்ற நேரத்தில் மைனாவதியும், தியாகராஜனும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மைனாவதியின் கள்ளக்காதலுக்கு சசிகுமார் இடைஞ்சலாக இருந்தான். மைனாவதியின் காமம் கண்ணை மறைத்தது. பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை மைனாவதி கொலை செய்ய முடிவு செய்தார்.

அதற்காக மனதை கல்லாக்கிய மைனாவதி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகனை கடந்த 5-ந்தேதி மாலை பிச்சாம்பாளையம் சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்குள்ள கிணற்றில் தள்ளி மகனை கொலை செய்தார்.

பின்னர் ஒன்றும் தெரியாதது போல வீட்டிற்கு வந்த மைனாவதி வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த மகன் மாயமானதாக கூறி அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடியுள்ளார். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

இதையடுத்து சசிகுமாரை தள்ளி விட்டு கொன்ற கிணற்றை அடையாளம் காட்டும் வகையில் நேற்று போலீசார் மைனாவதியை அங்கு அழைத்து சென்றனர். அதற்குள் இருட்டி விட்டதால் நேற்று கிணற்றில் இறங்கி தேட முடியவில்லை.

இன்று காலை மைனாவதியை அந்த கிணற்று பகுதிக்கு மீண்டும் அழைத்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுவன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். உடல் கிடைத்ததும் 2 பேரையும் கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர். தகவல் அறிந்த அந்த பகுதியினரும் ஏராளமானோர் அங்கு திரண்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!