கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் மனைவிக்கு அரிவாளால் வெட்டு…!


கடன் தொல்லையால் மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கரிசகாடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவரது மனைவி பானுமதி (45). இவர்களது மகன்கள் மணிகண்டன், தினேஷ், குணா.

இவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். முருகனுக்கு 6 சகோதரிகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக முருகன் பலரிடம் கடன் வாங்கியிருந்தார்.

அதனை பல நாட்கள் ஆகியும் அவரால் அடைக்க முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கடன் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.


இதன் காரணமாக சொத்தை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார். இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த முருகன் அரிவாளால் பானுமதியை வெட்டினார். இதில் அவர் பலத்த வெட்டுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

இதையடுத்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்த முருகன், உயிருக்கு போராடிய மனைவியை மீட்டு கார் மூலம் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு சென்றதும் பானுமதிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனிடையே முருகன் மயங்கி விழவே, அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் வி‌ஷம் குடித்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகன் இறந்தார். பானுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!