நடிகர் கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு..! என்ன தெரியுமா..?


நடிகர் கமல்ஹாசனை பிரிவதற்கு முன் அவருடன் வாழ்ந்த கடைசி நாட்களில் சுயமரியாதையை இழந்தேன் என்பது உள்பட நடிகை கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.இது குறித்து கவுதமி சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:கமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து செயல்படுவதாக வரும் தகவல்களை அறிந்து அப்செட் ஆனேன். அவருடன் தனிப்பட்ட முறையிலோ அல்லது ெதாழில் ரீதியாகவோ நான் இணைந்திருக்கவில்லை. அதுபோல் வரும் தகவல் முற்றிலும் தவறானது. கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடன் இருந்த உறவை நான் முறித்துக்கொண்டேன். அன்றுமுதல் நான் தனிப்பட்ட முறையில் எனது செயல்பாடுகளை செய்து வருகிறேன். எனது மகளின் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறேன். டென்ஷனான சூழலிலிருந்து நான் விடுபட்டு சுதந்திரமான சூழலில் இருக்கிறேன்.

தனித்து வாழ்ந்து வரும் இந்த சூழலில் எனக்காகவும் எனது மகளுக்காகவும் நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 13 வருடமாக கமலுடன் இணைந்திருந்த வாழ்வில் அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்காக காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வந்தேன். மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிப்பில் கமல் நடித்த படத்துக்கும் காஸ்டியூம் டிசைனராக இருந்திருக்கிறேன். இதுதான் எனது அடிப்படை வருமானமாக இருந்தது. கமல்ஹாசனின் தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்களுக்கு எனக்கு தரவேண்டிய சம்பள பாக்கி உள்ளது. எனது நிதி ஆதாரமே பாக்கி பணம் வரவேண்டியதில்தான் உள்ளது. அதை வைத்துதான் எனது மறுவாழ்வை கட்டமைக்க வேண்டும். கமலிடமிருந்தும், ராஜ்கமல் நிறுவனத்திடமிருந்தும் பண பாக்கியை வசூலிக்க பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. மேலும் ஆன்லைனில் தொடங்கப்பட்ட நிறுவனம் ஒன்றிற்காகவும் நான் பணியாற்றி இருக்கிறேன். அதற்காகவும் எந்த சம்பளமும் எனக்கு தரப்படவில்லை.


கடந்த 2016ம் ஆண்டுக்கு முன்பே எங்களுக்குள் ஏற்பட்ட மாறுபட்ட கருத்துக்களாலும் அதனால் எனக்கு ஏற்பட்ட வலியாலும் அவரிடமிருந்து பிரிந்தேன். ஒருவருக்கொருவர் மீதான புரிதல், நேர்மை, அன்பு எல்லாம் மறைந்தபோது ஒவ்வொரு நாளும் நான் சுயமரியாதை இழந்தநிலையாக உணர்ந்தேன். எங்களுக்குள் உள்ள உறவு முறிந்ததற்கான காரணத்துக்கு காரணம் ஸ்ருதி என்று கூறுவதில் உண்மை இல்லை. மூன்றாம் நபர்கள் குறிப்பாக பிள்ளைகள் யாரும் மூத்தவர்களின் உறவு முறிய எப்போதும் காரணமாக இருக்க மாட்டார்கள். ஸ்ருதியும், அக்‌ஷராவும் சிறுவயதிலிருந்தே சிறந்த பிள்ளைகள். இன்றும் அப்படித்தான் அவர்களை பார்க்கிறேன். கமலுக்கும் எனக்குமான உறவு முறிவுக்கு அவர்கள் எந்த விதத்திலும் காரணமில்லை. மாறாக கமல்ஹாசனிடம் ஏற்பட்ட மாற்றத்தைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த உணர்வுதான் முறிவு ஏற்பட முழுகாரணம்.

கமல்ஹாசனுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டபோது அவருடன் உறுதுணையாக இருந்து கவனித்துக்கொண்டேன். இதுதான் என் வாழ்நாளில் நான் அனுபவித்த அதிர்ச்சியான சம்பவம். இது தேவையில்லாத, முட்டாள்தனமான விபத்து. அந்த கடினமான நாட்களில் அவருடன் நான் பக்கபலமாக இருந்தேன். இந்த தகவல்களை வெளிப்படுத்துவதற்கு காரணம் தனியான எனது வாழ்வை நடத்தி செல்லும் இந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட வலியை பகிர்ந்துகொள்வதற்காகத்தான். கணக்கிலாதவர்களிடமிருந்து வரும் ஆதரவுக்கும் அன்பும் நான் என்றும் கடமைபட்டிருக்கிறேன்,இவ்வாறு கவுதமி கூறி உள்ளார்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!