பில்லி, சூனியம், செய்வினையானது எல்லோரையும் பாதிக்குமா..?


ஒருவரின் உடல்நலனை வருத்தச் செய்வது, குடும்பத்தில் நிம்மதியை கெடுப்பது, வருமானத்தை தடை செய்வது, மனநிம்மதி இல்லாமல் செய்வது இவை செய்வினையின் நோக்கங்களாக இருக்கிறது. இதனை செய்வினை பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள். இந்த செய்வினையானது எல்லோரையும் பாதிக்குமா?

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால், அதாவது சந்திரன் நீச்சம் அடைந்திருந்தால், 6-8-12-ம் இடங்களில் மறைந்திருந்தால் இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். சந்திரன் நீச்சம் அடைந்து, அந்த வீட்டுக்குரிய கிரகம் பலம் பெற்றால் பயம் இல்லை. 6-8-12-இல் சந்திரன் சுபர் பார்வை, சுபர் சேர்க்கை பெற்றதாலும் பயம் இல்லை – பாதிப்பு இல்லை.

பூர்வ புண்ணியஸ்தானம் என்கிற 5-ம் இடம் பலம் குறைந்தாலும் கண் திருஷ்டி, செய்வினை பாதிப்பு உண்டாகும். இன்னும் ஆழமாக இந்த செய்வினை பற்றி ஆராய்ந்தால், பூர்வீகத்தில் செய்த வினைதான் தற்பொழுது செய்வினையாக பாதிக்கிறது.

ஒருவன் தெரியாமல் அல்லது தெரிந்து செய்த வினையே அவனை பாதிக்கிறது. அப்பன் வாங்கிய கடன் பிள்ளையை பாதிப்பதுபோல் பூர்வீகத்தில் செய்த தவறு இந்த ஜென்மத்தில் நல்லவனாக இருந்தாலும் அது சற்று தண்டித்துவிட்டு செல்லும்.


“நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லையே, யாருக்கும் துரோகம் செய்யவில்லையே எனக்கு ஏன் இப்படி ஏற்படுகிறது?” என்று கேட்டால், நீ முன்னேறக் கூடாது என்று ஒருவன் செய்துவிட்டால், அம்பாள் அருளால் அது நிவர்த்தி செய்யப்பட்டால், உன்னை பிடித்த வினை, ஏவியவனை பிடித்து வாட்டும் இதுதான் சத்தியம். சுவற்றில் பந்துபட்டு, எறிந்தவன் கைக்கே திரும்பும். அதுபோலதான் செய்வினை.

பாதிப்பு வந்தாலும் கவலையில்லை. கோயில்களுக்கு சென்று பிராத்தனை செய்வதாலும், நேர்த்தி கடன்களாலும், சில பரிகாரங்களாலும் நிச்சயம் பாதிப்பை தீர்க்க முடியும். ஆகவே, “ஐயோ நமக்கு செய்வினை செய்துவிட்டார்களே” என்று பயமோ, கவலையோ வேண்டாம். எதற்கும் ஒரு தீர்வு உண்டு.

ஆகவே ஸ்ரீதுர்காதேவி அருளால் கூறுகிறேன். மண் நன்றாக இருந்தால் மரம் வளரும். எண்ணங்கள் செயல்கள் நன்றாக இருந்தால் செழிப்பான வாழ்க்கை உண்டு. நம் எண்ணமே ஏற்றம் தரும். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!