நடுரோட்டில் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர்!

மொபட்டில் வந்த இளம்பெண்ணின் மீது மோட்டார் சைக்கிளால் மோதி கீழே தள்ளி கழுத்தை அறுத்து அவருடைய கணவர் படுகொலை செய்தார்.

சிவகங்கை மாவட்டம் கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 41). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சூரியா (30).

இவர்களுக்கு 5 வயதில் பிரகதி என்ற மகள் உள்ளாள். பிரபாகரனின் வீடு, தேவகோட்டை சரசுவதி வாசக சாலை காசிலிங்கம் நகர் பகுதியில் உள்ளது. அவருடைய மனைவி, தேவகோட்டையில் அழகு நிலைய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சிங்கப்பூரில் இருந்து பிரபாகரன், 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். அவர் தனது சொந்த ஊரான கடம்பாகுடியில் இருந்தார். தனது மனைவியை கடம்பாகுடிக்கு வருமாறு அழைத்தார்.

ஆனால் சூரியா செல்ல மறுத்துவிட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக உறவினர்கள் சமரசம் செய்தும் சூரியா கணவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டதாக தெரிகிறது.

மொபட்டில் வந்தார்

கணவர் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் அவருடன் வாழ விருப்பம் இ்ல்லை எனவும் போலீஸ் நிலையத்தில் சூரியா கூறியதாக தெரிகிறது.

இதனால் மனைவி மீது பிரபாகரன் ஆத்திரம் அடைந்தார். மேலும் மனைவியின் நடத்தை மீதும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக சரஸ்வதி வாசக சாலை பகுதியில் சூரியா மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்து பிரபாகரன் தயாராக இருந்துள்ளார்.

மனைவி வந்ததும், தனது மோட்டார் சைக்கிளால் மனைவியின் வாகனத்தின் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி சூர்யா கீழே விழுந்து அலறினார்.

கழுத்தை அறுத்து கொலை

அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், தான் கொண்டு வந்த அரிவாளால் மனைவியை வெட்டினார். பின்னர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

நடுரோட்டில் நடந்த இந்த பயங்கர கொலையை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில், பிரபாகரன் தேவகோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!