தக்காளிக்கு வந்த சோதனை- லாரியை விரட்டி சென்று தக்காளி கேட்ச் பிடித்த வாலிபர்கள்!

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்தனர். 20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 2200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வெளிச்சந்தை மற்றும் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கிலோ, 2 கிலோ வாங்கிய காலம் போய் கால் கிலோ, அரை கிலோ வாங்க வேண்டிய சூழல் வந்துள்ளது.

மேலும் ஓட்டல்களில் தக்காளி சட்னி மற்றும் தக்காளி சாதம் உள்ளிட்ட உணவு வவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூரில் தக்காளி விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால், பைக்கில் சென்ற 2 பேர் தக்காளி லோடு ஏற்றி வந்த லாரியில் இருந்தவரிடம் தக்காளி கொஞ்சம் கொடுங்கள், என கேட்டு கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

வேலூர் கொணவட்டம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர்கள் லாரியை விரட்டி சென்றனர்.

தக்காளி விலை அதிகமாக உள்ளது. தக்காளி கொஞ்சம் போடுங்க ப்ளீஸ் என கேட்டதும் லாரியில் இருந்த நபர் தக்காளிகளை பைக்கில் வந்த வாலிபர்களிடம் ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி வீசினார்.

அந்த தக்காளியை பைக்கில் சென்ற வாலிபர்கள் பத்திரமாக கேட்ச் பிடித்து, பின்னால் அமர்ந்து வந்தவரிடம் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் என்னய்யா இது தக்காளிக்கு வந்த சோதனை பார்த்தாயா? என நினைத்து சிரித்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!