பம்பர் திரைவிமர்சனம்!

பம்பர் லாட்டரியில் விழும் பணத்தை அபகரிக்க நினைக்கும் கும்பல் அதை சுற்றிய கதை.

தூத்துக்குடியில் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து திருட்டு வேலை செய்து வருகிறார் நாயகன் வெற்றி. இவர்களை போலீஸ் தேடுவதால், இவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடுகின்றனர்.

நான்கு பேரும் சபரிமலை கோவிலுக்குச் செல்கின்றனர். அங்கு வயதான முஸ்லீம் நபரான ஹரீஷ் பெராடி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்.

அவரிடம் இருந்து 10 கோடி ரூபாய்க்கான பம்பர் லாட்டரி சீட்டினை வாங்குகிறார். அந்த லாட்டரியை அங்கேயே விட்டுச் சென்று விடுகிறார் வெற்றி. அதை எடுத்து வைத்துக் கொள்ளும் ஹரீஷ் பெராடி, சில நாட்களில் அந்த லாட்டரிக்கு பத்து கோடி ரூபாய் பம்பர் விழுந்திருப்பதை அறிகிறார்.

அந்த லாட்டரியை தான் எடுத்துக் கொள்ளாமல் வெற்றியிடம் கொடுப்பதற்காக தூத்துக்குடி வருகிறார் ஹரீஷ் பெராடி. மேலும் பத்து கோடியை அனுபவிக்க ஒரு சில கூட்டம் திட்டம் போடுகிறது.

இறுதியில் ஹரீஷ், வெற்றியை தேடிக் கண்டுபிடித்தாரா.? பத்து கோடி ரூபாயை வெற்றி வாங்கினாரா? பணத்தை அடைய நினைக்கும் கும்பல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வெற்றி, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

வெற்றியின் வெற்றி பட வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். நாயகி ஷிவானி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முழு கதையையும் தன் தோளில் தாங்கி நிற்கிறார் ஹரீஷ் பெராடி.

உடல்மொழியில் ஆரம்பித்து தனது பேச்சு மொழியிலும் கவனம் ஈர்த்து இருக்கிறார். ஜி பி முத்துவின் துப்பாக்கி பாண்டி காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை.

போலீஸ் அதிகாரியாக நடித்த அருவி மதன், யதார்த்த நடிப்பை கொடுத்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். நேர்மை, நியாயம், மனிதநேயம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் செல்வகுமார்.

மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் வேகம் எடுத்து இருக்கிறது. தோய்வு இல்லாத திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

கோவிந்த் வசந்தாவின் இசையும், வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மொத்தத்தில் பம்பர் – அதிர்ஷ்டம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!