பட்டப் பகலில் கொள்ளையடித்துவிட்டு இலவச ஜூஸால் மாட்டிக்கொண்ட தம்பதி!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் கடந்த 10ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

பட்டப்பகலில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அயுதமேந்திய கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி 8 கோடியே 49 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மந்தீப் கவுர் என்ற பெண்ணும் அவரது கணவர் ஜெஸ்வீந்தர் சிங்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இந்த தம்பதியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். தம்பதி இருவரும் நேபாளம் தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசார் தம்பதியர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.

நேபாளம் செல்வதற்கு முன் உத்தரகாண்ட்டில் உள்ள சீக்கிய மத வழிபாட்டு தலமான ஹிம்ஹண்ட் ஷாகிப், ஹரித்வார், கேதார்நாத்தில் உள்ள இந்து மத வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்த செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து உத்தரகாண்ட் விரைந்த போலீசார் ஷமோலி மாவட்டத்தில் உள்ள சீக்கிய மத வழிபாட்டு தலமான ஹிம்ஹண்ட் ஷாகிப் சென்றனர். அங்கு பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்த நிலையில் தம்பதியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், வித்தியாசமான திட்டம் தீட்டிய போலீசார் வழிபாட்டு தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக பழஜூஸ் வழங்கும் திட்டத்தை தொடங்கினர்.

10 ரூபாய்க்கு வழங்கப்படும் ஜூசை பக்தர்களுக்கு போலீசார் இலவசமாக வழங்கினர். உள்ளூர் போலீசார் உதவியுடன் பஞ்சாப் போலீசார் இந்த திட்டம் தீட்டி மாற்று வேடம் அணிந்து இலவசமாக பழ ஜூஸ் வழங்கினர்.

வழிபாட்டு தலத்திற்கு வந்திருந்த அனைவரும் இலவச பழ ஜூஸ் வாங்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, பஞ்சாப்பில் 8 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு ஹிம்ஹண்ட் ஷாகிப் மத வழிபாட்டு தலத்திற்கு வந்திருந்த மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜெஸ்வீந்தர் சிங்கை போலீசார் கண்டு பிடித்தனர்.

இருவரும் போலீஸ் அமைத்த இலவச பழஜூஸ் வழங்கும் பகுதிக்கு வந்து 10 ரூபாய் மதிப்புள்ள பழ ஜூசை இலவசமாக பெற்றுச்சென்றனர். இதை கண்ட போலீசார் இருவரையும் பின் தொடர்ந்து சென்றனர்.

பின்னர் இருவரும் மத வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்தும் வகை காத்திருந்த போலீசார் வழிபாடு முடித்துவிட்டு வெளியே வந்த மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜெஸ்வீந்தர் சிங்கை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தம்பதியிடமிருந்து 21 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்கப்பட்ட 8 கோடி ரூபாயில் இதுவரை 6 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். உத்தரகாண்டில் கைது செய்யப்பட்ட கில்லாடி தம்பதியை போலீசார் பஞ்சாப் அழைத்து வர உள்ளனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!