சொந்த வீடு கட்டிய கையோடு கல்யாணம் பண்ண தீனா!

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் தீனாவுக்கு இன்று நல்லபடியாக திருமணம் நடந்தது. அவரின் மனைவி பிரகதி யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சொந்த ஊரில் புது வீட்டு கட்டி முடித்த கையோடு பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகர் தீனா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தீனா. சின்னத்திரையில் தனக்கென ஒரு பெயர் அடுத்த அவர் தனுஷ் கண்ணில் பட்டார்.

தான் இயக்குநர் அவதாரம் எடுத்த ப. பாண்டி படம் மூலம் தீனாவை பெரிய திரையில் அறிமுகம் செய்து வைத்தார் தனுஷ். தன் முதல் படத்திலேயே தனுஷின் நண்பராக நடித்தார் தீனா. தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் தீனா. இதையடுத்து தான் தளபதி விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படத்திலும் தீனாவை நடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ். கமல் ஹாசனின் விக்ரம் படத்திலும் வந்தார். தொடர்ந்து பெரிய திரையில் பிசியாகி விட்ட தீனா வாழ்வில் இன்று ஒரு நல்ல நாள்.


தீனாவுக்கும், பிரகதி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டையில் இன்று காலை திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் தீனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது ஒரு வேளை காதல் திருமணமாக இருக்குமோ என பேச்சு கிளம்பியது. இது காதல் எல்லாம் இல்லை பாஸ். எங்க வீட்டில் பார்த்து வைத்த பெண் தான் பிரகதி. அவர் ஒரு கிராஃபிக் டிசைனர் என விளக்கம் அளித்து காதல் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் தீனா.


தீனா, பிரகதி திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் தான் கலந்து கொண்டார்கள். கலக்கப் போவது யாரு புகழ் சரத் மட்டும் தீனாவின் திருமணத்திற்கு சென்றிருந்தார்.

திருமணத்தை அடுத்து ஜூன் 10ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் பெரிய திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்களாம்.


சொந்தமாக வீடு கட்டிய பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று தீனா முன்பு தெரிவித்திருந்தார். அண்மையில் தான் தன் சொந்த ஊரில் மூன்று அடுக்குமாடி வீடு கட்டி குடியேறினார். சொன்னபடியே வீடு கட்டிய பிறகு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

புது வீடு, கல்யாணம் கலக்குறீங்க தீனா என்கிறார்கள் ரசிகர்கள். தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் தீனாவை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. அவரின் கெரியரில் மேன்மேலும் முன்னேற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.


திருமணம் பற்றி தீனா கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியதாவது, எல்லாம் கடவுளின் அருள் மற்றும் என் ரசிகர்களின் அன்பு தான் காரணம். அதனால் தான் எல்லாம் நல்லதாக நடக்கிறது.

படப்பிடிப்பில் இருந்ததால் பலருக்கு அழைப்பிதழ் கொடுக்க முடியவில்லை. அதனால் போன் செய்து பேசினேன், வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பினேன்.

பிரபலங்களுக்காகவே சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அடுத்த வாரம் நடக்கிறது. இது பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். திருமணத்திற்கு பிறகு காதலிப்போம் என்றார்.-News & image Credit: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!