காவல் உயர் அதிகாரியின் காரை சேதப்படுத்திய தனுஷ் பட நடிகை!

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் பத்திரிகையாளர்கள் காலனியில் துணை காவல் ஆணையாளர் ராகுல் ஹெக்டே என்பவர் வசித்து வருகிறார்.

இந்த கட்டிடத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது நண்பர் டேவிட் ஆகியோரும் வசித்து வருகின்றனர். ராகுலின், அரசு கார் அவரது இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த காரின் மீது நடிகை டிம்பிள் மற்றும் அவரது நண்பர் இருவரும் காரை கொண்டு மோதி உள்ளனர்.

இதில் ராகுலின் கார் சேதமடைந்து உள்ளது. இதுபற்றி துணை காவல் ஆணையாளரின் கார் ஓட்டுநர், ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். உள்நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்து உள்ளது என புகாரில் அவர் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், காரை கொண்டு டிம்பிளும், அவரது நண்பரும் மோதியது தெரிய வந்துள்ளது. இதன்பேரில் நடிகை டிம்பிளுக்கு எதிராக குற்ற வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது.

எனினும், காவல் உயரதிகாரி தனக்கு உள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகிறார் என்று டிம்பிள் தனது டுவிட்டரில் இன்று தெரிவித்து உள்ளார். அதிகார துஷ்பிரயோகம், தவறுகளை மறைக்காது. சத்தியமே வெல்லும் என அவர் பதிவிட்டு உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு கல்ப் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரை துறையில் நடிகை டிம்பிள் ஹயாதி அடியெடுத்து வைத்து, நுழைந்துள்ளார். அதன்பின் கில்லாடி மற்றும் ராமபாணம் போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

தமிழில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடிகர் விஷாலுடன் ஜோடியாக நடித்து உள்ளார். நடிகர் தனுஷ் இந்தியில் நடித்த அத்ராங்கி ரே என்ற படத்திலும் டிம்பிள் நடித்து இருக்கிறார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!